புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும் இன்றைய பொதுக்கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்த தவெகவின் தமிழக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் விஜய் இன்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். 41 பேர் பலியான கரூர் துயர சம்பவத்துக்கு பின்னர் விஜய், பொதுவெளியில் பங்கேற்கும் முதல் பொதுக் கூட்டம் இது. தவெக தலைவராக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் விஜய் முதல் முறையாக பங்கேற்று பேசுகிறார்.
விஜய் பங்கேற்கும் இந்தக் கூட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டத்துக்கு 5,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க நேற்று இரவு முதலே தவெக தொண்டர்கள் வருகை தர தொடங்கினர். இன்று காலை முதல் மெட்டல் டிடெக்டர் பரிசோதனையுடன் தவெக தொண்டர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த சோதனையின் போது ஒருவரிடம் இருந்து கைத் துப்பாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நபரை பிடித்து விசாரணை நடத்திய போது, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த டேவிட் என்பதும் தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என்றும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரி விஜய் பொதுக் கூட்டத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை என கூறப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பிடிபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துப்பாக்கி வைத்திருக்க டேவிட் உரிமம் பெற்றிருந்தாரா? என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
