பொள்ளாச்சியை அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் திடீர் வெள்ளத்தில் சிக்கிய காவலாளிகள் இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் மீட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கோவை மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பொள்ளாச்சி அடுத்த பாலாற்றின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இரவு நேரத்தில் இரண்டு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை முதல் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சிற்றோடைகள் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பாலாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்ததால் கோயிலில் இரவு காவலர்களாக பணியாற்றி வரும் மகாலிங்கம், ஜெயக்குமார் ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி கொண்டனர்.
இதையடுத்து காவலாளிகள் இருவரும் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற தீயணைப்பு துறை வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்துக்குப் பிறகு இருவரையும் கயிறு கட்டி கரைக்கு அழைத்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
