தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும் திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவருமான ஐ.பெரியசாமியின் மகள் இந்திராணி வீட்டில் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி. செந்தில்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வீடுகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஐ.பெரியசாமி மகள் இந்திராணிக்கு சொந்தமான நூற்பாலைகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி இருந்தனர். வத்தலகுண்டு அருகே சேகவும்பட்டி பகுதியில் இந்திராணிக்கு சொந்தமான நூற்பாலை அமைந்துள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் வள்ளலார் நகரில் உள்ள இந்திராணி வீட்டில் நேற்று முதல் ஜிஎஸ்டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்திராணிக்கு சொந்தமான நூற்பாலைகளில் ஜிஎஸ்டி முறைகேடுகள் மூலம் வரி ஏய்ப்பு நடந்ததாக கிடைத்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
