நம் நாட்டின் ஜவுளித் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 15 மாநிலங்களுடன் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மத்திய ஜவுளி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. குவஹாத்தியில் நடைபெற்ற தேசிய ஜவுளி அமைச்சர்கள் மாநாட்டில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
‘டெக்ஸ்-ராம்ப்ஸ்’ (Tex-RAMPS) என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஆடை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப ஜவுளி போன்ற துறைகளில் உள்ள தரவு இடைவெளிகளைக் குறைத்து, துல்லியமான திட்டமிடலை மாவட்ட மற்றும் தொகுதி அளவில் கொண்டுவர இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜவுளித் துறையை 350 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொழில்துறையாக உயர்த்துவதே அரசின் இலக்காகும்.
இந்த ஒப்பந்தங்கள் ‘டெக்ஸ்-ராம்ப்ஸ்’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டம் தரவு சார்ந்த திட்டமிடலை வலுப்படுத்தி, ஜவுளித் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இதன் மூலம் கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஆடை உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப ஜவுளி போன்ற பிரிவுகளில் உள்ள தகவல்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாவட்ட மற்றும் தொகுதி அளவில் சரியான திட்டங்களை வகுக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது.
இந்த மாற்றங்களுக்கு ஆதரவாக, ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மேலும், மாவட்ட அளவில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் நிதி ஒதுக்கப்படுகிறது.
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்த ஒருங்கிணைந்த திட்டமிடல், ஜவுளித் துறையை ஒரு பெரிய தொழில்துறையாக மாற்றும் என்று மத்திய ஜவுளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
