இந்த வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் யாருக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. இன்று நாம் நலமாக இருக்கலாம், ஆனால் நாளை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்படிப்பட்ட நிச்சயமற்ற காலங்களிலும், மருத்துவ அவசர காலங்களிலும் பணம் மட்டுமே கைகொடுக்கும். இதற்காகத்தான் மக்கள் ஆயுள் காப்பீடு அல்லது மருத்துவக் காப்பீடு எடுத்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள். ஆனால், அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு கிடைப்பதில்லை.
இந்தியாவில் கணிசமான மக்கள் நடுத்தர வர்க்கத்திற்குக் கீழ் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் சம்பாதிக்கும் பணம் வீட்டு வாடகை, உணவுச் செலவு, குழந்தைகளின் கல்வி போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கே போதுமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர்களுக்கு மருத்துவக் காப்பீடு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. இத்தகைய தேவை உள்ள மக்களுக்காக, மோடி அரசு 2017ஆம் ஆண்டு தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள தனிநபர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஆயுஷ்மான் அட்டை மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை ரொக்கமில்லா சிகிச்சையைப் (Cashless Treatment) பெறலாம். இது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக இருந்தாலும், அதன் வயது வரம்புகள் மற்றும் நிபந்தனைகள் காரணமாக இது பரவலாக மக்களைச் சென்றடையவில்லை. இதன் விளைவாக, குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, மிகக் குறைந்த பிரீமியத்தில் லட்சக்கணக்கான ரூபாய் காப்பீடு (Insurance) வழங்கும் சில சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களைப் பற்றி இங்கே காண்போம்.
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா:
இது மத்திய அரசின் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாகும். 2015இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், ஆண்டுக்கு ரூ.20 என்ற மிகக் குறைந்த கட்டணத்தில், அதாவது மாதத்திற்கு 2 ரூபாய்க்கும் குறைவான செலவில் ரூ.2 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது. இந்தக் காப்பீட்டைப் பெற எந்த மருத்துவப் பரிசோதனையும் தேவையில்லை. இந்தத் திட்டத்தில் 51 கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்துள்ளனர்.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா:
இதுவொரு ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது எந்தக் காரணத்திற்காகவும் ஏற்படும் மரணத்தின் போது குடும்பத்திற்கு நிதி ஆதரவை வழங்குகிறது. தனிநபர்கள் ஆண்டுக்கு ரூ.436 பிரீமியம் செலுத்த வேண்டும். காப்பீடு செய்தவர் இறந்தால் அவரது நாமினிக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். 18 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் திட்டத்தில் சேரலாம். 55 வயது வரை இந்த காப்பீடு தொடரும்.
