திருச்செங்கோட்டில் குழந்தை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அரசு பெண் மருத்துவரை சஸ்பெண்ட் செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (அக்டோபர் 16) உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விசைத்தறி தொழிலாளி தம்பதிக்கு கடந்த 12ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அங்கு மகப்பேறு மருத்துவராக பணிபுரியும் அனுராதா என்பவர் புரோக்கர் மூலம் குழந்தையை விற்பனை செய்ய விலை பேசியதாக மாவட்ட ஆட்சியர் உமாவுக்கு புகார் வந்தது.
இதுதொடர்பாக திருசெங்கோடு காவல்நிலையத்திற்கு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசார், குழந்தை விற்பனை முயற்சியை தடுத்தனர்.
தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஏழை, எளிய மக்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களுக்கு பிறக்கும் 3வது குழந்தையை விற்கும் முயற்சியில் மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் இருவரும் சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையிலும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிப்பதற்கு காவல்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையின் முடிவில் குற்றஞ்சாட்டப்படும் நபர்கள் மீது துறை மற்றும் சட்ட ரீதியாகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அதன் முதல் நடவடிக்கையாக குழந்தை விற்பனையில் உடந்தையாக இருந்த அரசு மருத்துவர் அனுராதா மற்றும் புரோக்கர் லோகாம்பாள் இருவரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் மருத்துவர் அனுராதா மீது துறை ரீதியான நடவடிக்கையாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தாமதமாக வந்த அதிகாரிகள்… மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி ஆக்சன்!
