பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் தேதி தராததால் 9 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் விதியை மீறி செயல்பட ஆளுநர் அழுத்தம் கொடுப்பதாகவும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று(ஜூன் 8) செய்தியாளர்களை சந்தித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி,
”பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஒரு கோடியே 87 லட்சத்து 693 விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளதாகவும் இது கடந்த ஆண்டை விட 18,610 விண்ணப்பங்கள் அதிகம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ”அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட 7852 விண்ணப்பங்கள் அதிகம் வந்துள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கான இடங்கள் என அனைத்து பிரிவுகளிலும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டை விட அதிகம் வந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சர் தலைமையின் கீழ் பொறியியல் படிப்புகளுடன் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் உள்ளிட்டவை அளிக்கப்படுவதன் எதிரொலியாகவே மாணவர்கள் விண்ணப்பங்கள் அதிகம் வரப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்களில் கடந்த 2 ஆண்டு காலமாக பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை.
இதன் காரணமாக கல்லூரிகளில் படித்து முடித்த 9 லட்சத்து 26 ஆயிரத்து 542 மேற்பட்ட மாணவர்கள் பட்டமளிப்பு விழா சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றுக்கு தமிழக ஆளுநர் தேதி தராததன் காரணமாகத்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும், ”பட்டமளிப்பு விழாவில் வட இந்தியாவைச் சார்ந்த பிரபலங்கள் மற்றும் மத்திய அமைச்சர்களை அழைக்க ஆளுநர் விரும்புகிறார்.
அதே நேரத்தில் மத்திய அமைச்சர்கள் தேதி கிடைக்காததன் காரணமாக பட்டமளிப்பு விழா நடைபெறுவதில் கால தாமதம் ஏற்படுவதாக கருதுகிறேன்.
பட்டமளிப்பு விழா நடத்துவதற்கு தமிழக அரசின் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆளுநர் தான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக அரசு தரப்பில் மூன்று பேர் பரிந்துரை செய்யப்பட்டு கடந்த அக்டோபர் மாதமே ஆளுநரிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
ஆனால் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க மறுப்பதாகவும் பல்கலைக்கழக மானிய குழுவில் இருந்து ஒருவரை பரிந்துரை செய்ய வேண்டும் என விதியை மீறி செயல்பட ஆளுநர் தூண்டுவதாகவும் குற்றம் சாட்டினார்
தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, ”தமிழகத்தில் கல்வி தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் சிங்கப்பூர் பயணத்தின் கூட முதலமைச்சர் அங்குள்ள பல்கலைக்கழகத்துடன் மாணவர்கள் பரிமாற்றம் செய்வது தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் பாடங்களை பொருத்தவரை சிவில் மற்றும் மெக்கானிக் பாடப்பிரிவுகள் தமிழ் மொழியில் புத்தகங்கள் வெளியான நிலையில் பிற பாடப்பிரிவுகளும் தமிழ் மொழியில் புத்தகங்களை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 70 புத்தகங்கள் தயாராகி இருக்கிறது.
மத்திய அரசு மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் தமிழக அரசின் கல்வி நிறுவனங்கள் முன்னிலை வகித்து வரும் நிலையில
தமிழக ஆளுநர் கல்வியின் தரம் குறித்த விவகாரத்தில் அரசியல் செய்கிறார்” என்று குற்றம் சாட்டினார். மேலும், கல்வி தொடர்பான செயல்பாட்டிலும் ஆளுநர் அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார்.
வெளியாகும் 4 படங்கள்: ஜெயிக்கப் போவது யார்?
ஓடிடி ரிலீஸ்: கேரள திரையரங்குகள் வேலைநிறுத்தம்!
