சுதந்திர தினம் : ரூ.1,00,000 பரிசு வழங்கும் ஆளுநர்!

Published On:

| By christopher

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகை அறிவித்திருந்த கட்டுரை போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பலநூறு மாணவர்கள் பங்கேற்றனர். இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஆளுநர் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நாட்டின் அனைத்து இடங்களிலும் கொண்டாட்ட நிகழ்வுகள் தொடங்கியுள்ளன. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் ஆளுநர் மாளிகை கடந்த மாதம் 15ம் தேதி பள்ளி (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை), கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளி அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு “நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்” (தமிழ்), “My favourite Freedom Fighter” (ஆங்கிலம்). கல்லூரி/பல்கலைக்கழக அளவிலான மாணவர்களுக்கான கட்டுரைத் தலைப்பு “2047-ல் இந்தியா” (தமிழ்) “India by 2047” (ஆங்கிலம்) என்றும் அளிக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

போட்டி விதிமுறைகள்!

  • 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கலாம்
  • கட்டுரையானது மாணவர்களின் சொந்த மொழிநடையில் 10 பக்கங்களுக்கு (ஏ4 தாள்) மிகாமல் ஒரு தாளில் 20 வரிகளுடன் எழுதப்பட்டிருக்க வேண்டும்
  • எழுதிய கட்டுரைகளை ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மற்றும் கிண்டியில் உள்ள தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்‘துணைவேந்தர் அலுவலக முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
  • கட்டுரைகளை அனுப்பும்போது பெயர், வீட்டு முகவரி, கல்வி நிறுவன முகவரி, செல்போன் எண் ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனையடுத்து தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பலநூறு மாணவர்கள் கட்டுரைகளை எழுதியனுப்பியிருந்தனர். அக்கட்டுரைகளை மதிப்பிட்டு நடுவர்கள் குழு அளித்த பரிந்துரையின்படி தற்போது முதல் 3 இடங்களை பெற்ற வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வரும் 15ம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குகிறார்.

ADVERTISEMENT

வெற்றி பெற்றவர்கள்!

பரிசுத் தொகை அறிவிப்பு!

ADVERTISEMENT

போட்டியில் வெற்றி பெற்றுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கல்லூரி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.1,00,000, ரூ.75,000 மற்றும் ரூ. 50,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. அதேபோல் பள்ளி அளவிலான போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.75,000, ரூ. 50, 000/- மற்றும் ரூ. 25,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share