துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். Governor Ravi says vice chancellor
இந்தநிலையில், ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் உதகையில் துணை வேந்தர்கள் மாநாட்டிற்கு ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார். ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில், தமிழக அரசுடன் அதிகாரப் போட்டி நடத்துவதற்காக, துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி நடத்தவில்லை என்று ஆளுநர் மாளிகை இன்று (ஏப்ரல் 23) விளக்கமளித்துள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“உதகையில் வரும் ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாடு நடைபெற இருப்பதை, ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே அதிகாரப் போட்டி நடைபெறுவதைப் போல சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிடுகின்றனர். இந்த செய்திகள் முற்றிலும் தவறானவை.
ஆளுநர் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டன. இந்த மாநாட்டில், இந்தியா முழுவதும் உள்ள கல்வி மற்றும் தொழில்துறையில் புகழ்பெற்ற தலைவர்கள் தங்களது கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.
வளர்ந்து வரும் சவால்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் விரிவடைந்து வரும் எல்லைகள் குறித்து விவாதிப்பதற்கும், இந்த சவால்களை எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்த வழிமுறைகள் வகுக்கப்படும். இந்த மாநாட்டை தொடர்ந்து நடத்துவதால், நேர்மறையான முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.
முன்னதாக நமது கல்வி நிறுவனங்கள் ஒன்றொடொன்று இணைந்து செயல்படவில்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாதகமான வகையிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் தீங்கு விளைவித்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Governor Ravi says vice chancellor