சனாதன தர்மத்தில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வித்தியாசம் கிடையாது என்று ஆளுநர் ரவி இன்று (அக்டோபர் 5) தெரிவித்துள்ளார்.
வள்ளலார் பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “எப்போதெல்லாம் தர்மத்திற்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன் என்று பகவத் கீதையில் கண்ணன் கூறியதைப்போல ஒரு சங்கடமான காலகட்டத்தில் வள்ளலார் அவதரித்தார். இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரே குடும்பம் என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ரிஷிகளும் ஞானிகளும் நமக்கு உணர்த்தினார்கள். இதையே 150 ஆண்டுகளுக்கு முன்பாக மகாகவி பாரதியாரும் எடுத்துரைத்தார்.
ரிக் வேதம் நமது நூல்களிலேயே மிகவும் பண்டைய நூலாகும். இந்த நூலில், உலகத்தில் உள்ள செடி, கொடி, புழு, பூச்சி, வண்டு என அனைத்து உயிர்களும் சுகமாக, நோய் நொடி இல்லாமல் வளமாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாரத நாட்டின் ஒரே சித்தாந்தம் என்பது ஒருமைப்பாடு. சனாதன தர்மத்தில் சாதி, மதம் என்ற வேறுபாடு இல்லை. சாதியை பின்பற்றக்கூடிய ஒருவன் சனாதனவாதியாக இருக்க முடியாது. அனைவருமே ஒன்று என்பது தான் சனாதன தர்மத்தின் அடிநாதமாகும். இதை அறியாதவர்கள், சனாதன தர்மத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசுகிறார்கள்.
சனாதன தர்மத்தில் உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் என்ற வித்தியாசம் கிடையாது. ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்குள் எப்படி ஏற்றத்தாழ்வு இருக்க முடியும்?” என்றார்.
தொடர்ந்து ஆளுநர் ரவி பேசும்போது, “ஒரு குடும்பத்தில் முரண்பாடுகள் இருக்கலாம், கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால், அவரும் அந்த குடும்பத்தில் ஒரு உறுப்பினர் என்ற உரிமையை எப்போதும் இழக்க மாட்டார்.
இதற்கு உதாரணம், மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டம் மாநில அரசின் திட்டமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பிரதமர் மோடியின் கவனத்திற்கு அது எடுத்து செல்லப்பட்டபோது, திட்டத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளார். இது தான் நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜாமீனில் வெளியே வந்த மகா விஷ்ணு… ஆதரவாளர்கள் ஆரவாரம்!
எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? – வானிலை மையம் அப்டேட்!