திராவிட இயக்கக் கதைகளால் தமிழக உயர்கல்வி பாடத்திட்டம் நிரம்பியுள்ளது என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு மாநில பல்கலைக்கழகங்கள், மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் இரண்டு நாள் மாநாட்டின் நிறைவு விழா நேற்று (மே 28) நடைபெற்றது.
இந்த விழாவில் ஆளுநர் ரவி பேசும்போது,
“சரியான வழிகாட்டுதல், உந்துதல் ஆகியவை கிடைக்கப்பெற்றால், நமது மாணவர்கள் அதிசயங்களை நிகழ்த்த வல்லவர்கள். இருப்பினும், அவை போதுமான வகையில் கிடைக்காததால், அவர்களால் தங்கள் திறனையும் விருப்பங்களையும் நிறைவேற்ற முடியவில்லை.
நாட்டில் தங்களுக்குள்ள ஏராளமான வாய்ப்புகளைப் பற்றி நம் மாணவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை. திறமையான மாணவர்களான நமது முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட எந்த ஒரு ஆய்வு உதவித்தொகையின்றியும் அல்லது மாதத்துக்கு சுமார் 35,000 என்ற சொற்பத் தொகையைப் பெறுவதும் கவலைக்குரிய விஷயம்.
போதுமான வழிகாட்டுதல் மற்றும் உந்துதல் இல்லாததால், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) நடத்தும் என்இடி – ஜேஆர்எஃப் ஃபெலோஷிப் மூலம் அவர்களால் மாதத்துக்கு சுமார் 34-45 ஆயிரம் பெற முடியவில்லை.
இத்தொகை கௌரவ விரிவுரையாளர்கள் வாங்கும் ஊதியத்தை விட கிட்டத்தட்ட இரட்டிப்பானதாகும். நமது மாநிலத்தில் உள்ள சில தனியார் பல்கலைக்கழகங்கள் இந்த விஷயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மாநில பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் இந்தப் பிரச்சினையை தீவிரமாகக் கவனத்தில் கொண்டு, இதுபோன்ற தனியார் பல்கலைக்கழகங்களுடன் ஒத்துழைக்க வேண்டும்
தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரம் இளைஞர்கள் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து ஆங்கிலேயர்களுடன் போரிட்டனர். பலர் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். தேவகோட்டை, பெருங்காமநல்லூரில் சுதந்திர போராட்ட வீரர்கள் படுகொலை செய்யப்பட்டதை மறக்க முடியாது.
பாளையங்கோட்டையில் பாளையக்காரர்களின் எதிர்ப்பு மற்றும் மக்கள் எழுச்சிகள் மற்றும் அவற்றில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்.
மகாத்மா காந்தி 16 முறைக்கு மேல் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். அவர் முன்னெடுத்த சுதேசி இயக்கம், உப்பு சத்தியாகிரகம் போன்றவை தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றன,
மேலும், தமிழ்நாட்டு மக்கள் அவற்றில் முக்கிய பங்கு வகித்தனர். ஆங்கிலேயர்கள் வங்காளத்தை வகுப்பு ரீதியாகப் பிரித்தபோது, தமிழ்நாட்டில் ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டது,
அதுவே சிறந்த சுதந்திர போராட்ட வீரரான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை தேசிய சுதந்திர இயக்கத்தில் சேரத் தூண்டியது. பஞ்சாபில் நடந்த ஜாலியன் வாலா பாக் படுகொலை தமிழ்நாட்டு மக்களை ஆத்திரமடையச் செய்ததுடன் இளம் காமராஜர் தனது படிப்பை கைவிட்டு தேசிய சுதந்திர இயக்கத்தில் ஈடுபடத் தூண்டியது.
சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்குவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்தது. ஆனால், அவற்றை விளக்க ஒரு சில எடுத்துக்காட்டுகள் மட்டுமே உள்ளன.
தமிழ்நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பில், பிரிட்டிஷ் ஆட்சியின் தாக்கம், நமது பாடத்திட்டத்தில் இருந்து முற்றிலும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
மாறாக திராவிட இயக்கக் கதைகளால் அப்பாடத்திட்டம் நிரம்பியுள்ளது, சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வைப் பொறுத்தமட்டில், அய்யா வைகுண்டரின் அய்யாவழி இயக்கம், வள்ளலாரின் சன்மார்க்க இயக்கம், தலித் தலைவர் சுவாமி சகஜானந்தா தலைமையிலான நந்தனார் இயக்கம் என அனைத்து இயக்கங்கள் அவற்றில் தவறவிடப்பட்டுள்ளன.
19-ஆம் நூற்றாண்டில், பல லட்சம் தமிழ் மக்கள் ஆங்கிலேயர்களால் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மலேசியா, இலங்கை, ஃபிஜி ஆகிய நாடுகளில் உள்ள அவர்களது காலனிகளுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கு அவர்கள் பிரிட்டிஷ் நிலப்பிரபுக்களின் அடிமைகளைப் போல ஏலம் விடப்பட்டனர். விலங்குகளைப் போல நடத்தப்பட்டனர். எதிர்த்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், சித்திரவதை செய்யப்பட்டனர், கொல்லப்பட்டனர்.
இந்திய விடுதலைக்காக லட்சக்கணக்கான தமிழ் மக்களின் துயரங்களையும், தியாகங்களையும், ஆங்கிலேயர்களால் எண்ணற்ற மக்கள் பட்ட துன்பங்களையும் அழிப்பதென்பது, நமது எண்ணற்ற தியாகிகளை அவமதிப்பது மட்டுமன்றி, நமது முன்னோர்களின் உண்மையான வரலாற்றையும் தியாகத்தையும் மறுப்பதுமாகும்.
இது நமது இளைஞர்களிடையே தேசிய உணர்வை பலவீனப்படுத்தும். மேலும் இளைஞர்களை தேசிய நீரோட்டத்தில் இருந்து உணர்வுபூர்வமாக துண்டிக்கும் சூழல் அமைப்பை வளர்க்கிறது” என்று ஆளுநர் ரவி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குசேனலில் இணையுங்கள்…டன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப்