சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்திருக்கும் ராகவேந்திர மடத்தின் பொன் விழாவும், புதிய கட்டிட திறப்பு விழாவும் இன்று (ஜூலை 1) நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ராகவேந்திர மந்த்ராலயத்தின் மடாதிபதிகளோடு தமிழக பாஜக பிரமுகர் ஷெல்வி, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக அதிகாரி சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பேசிய ஷெல்வி, ‘தமிழ்நாட்டின் ஹீரோ ஆளுநர் ஆர்.என்.ரவி’ என்று குறிப்பிட்டார்.
சிறப்புரை ஆற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ராகவேந்திர சுவாமி இந்த மண்ணில் 400 ஆண்டுகளுக்கு முன் தோன்றினார். அவர் மனித சமூகத்துக்காக வாழ்ந்தார். இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் இந்த மண் புனித மண். எண்ணற்ற ரிஷிகளும் ஞானிகளும் இங்கே உதித்துள்ளனர்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சனாதனத்தை அவர்கள் உபதேசித்துள்ளனர். குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.
பாரதம் என்ற பதம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ், வடமொழி இலக்கியங்களில் இருந்திருக்கிறது. பாரதம் என்றால் என்ன? இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் ஆர்டிகிள் 1 ’இந்தியா தட் ஈஸ் பாரத்’ என்று கூறுகிறது.
இந்தியாவுக்குதான் அறிமுகம் தேவை. பாரதத்துக்கு அறிமுகம் தேவையில்லை. பாரதம் பாரதியர்கள் அனைவராலும் அறியப்பட்டது. இந்தியா என்ற வார்த்தை வெளிநாட்டினர் நமக்கு கொடுத்தது.
இந்த நாடு 1947 இல்தான் பிறந்தது என்று பலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு நகைச்சுவை. இது சனாதன நாடு. பாரதத்தின் வரையறை விஷ்ணு புராணத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது.
ஆழ்வார்களும், நாயன்மார்களும் வளர்த்த பக்தி நாடு முழுதும் பரவியுள்ளது. ஆச்சாரிய ராமானுஜாவும் இந்த மண்ணில் தான் பிறந்தார். ராமானுஜர், சங்கரர், மாத்வர் ஆகியோர் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக உண்மையை இந்த மண்ணுக்கு அளித்தனர். சனாதனம் என்பது எல்லாரையும் உள்ளடக்கியது” என்று இந்த விழாவில் பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
-வேந்தன்
