“ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ் கூடாரம்” – கி.வீரமணி குற்றச்சாட்டு!

Published On:

| By Kalai

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநரே பொறுப்பேற்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த  தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு நடுவே செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, ஜனநாயக வரம்புகளை மீறி தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக கூறினார்.

ஆளுநர் மாளிகை என்பது ஆர்.எஸ்.எஸ் கூடாரமாக திகழ்வதாக குற்றம் சாட்டிய கி.வீரமணி, ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழக அரசிற்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவதாக கி.வீரமணி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து ஆளுநர் ,அரசின் திட்டங்களுக்கு எதிராக செயல்படுவது தொடர்ந்தால் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி  ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கலை.ரா

லட்சுமி ஆயிரத்தில் ஒருத்தி!

வலுவடையும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share