பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதத்திலிருந்து அரசு விலகி நிற்க வேண்டும் என்பதே மதச்சார்பின்மை கோட்பாட்டின் அடிப்படை ஆகும். எந்த ஒரு மதத்தையும் பரப்புவது, பின்பற்றுவது அரசின் பணியாக இருக்கக் கூடாது.
மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை பேணி பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறையை அழிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் – பாஜக பரிவாரம் துடிக்கிறது. கோவில் சொத்துக்களை கொள்ளையடிப்பதும், சாதிய படிநிலையை பாதுகாப்பதுமே அவர்களின் நோக்கம்.
இதை முறியடிக்கும் நோக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறை பணிகளை மேற்கொள்வது நல்லது. மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.” என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இரண்டு நாள் நடைபெறும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை காணொளிக் காட்சி வாயிலாக கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சச்சிதானந்தம் கலந்துகொண்டு வேல் கோட்டத்தை தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகிக்கும் நிலையில், மத அடிப்படையிலான விழாக்களை அரசின் சார்பில் நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மத்திய அரசு தடை விதித்துள்ள மருந்துகள் எவை, எவை?
பிரதமர், முதல்வரைப் பாராட்டிய மனைவி : விவாகரத்து செய்த கணவன்!