அரசு பள்ளி ஆசிரியை மாணவிகளை செருப்பால் அடித்த விவகாரத்தில், அந்த மாணவிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. Government school teacher who hit female students with slippers
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே அரசு மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியையாக சாந்தி பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்ற போது, ஆறாம் வகுப்பு மாணவிகள் இருவர் தவறுதலாக கழிவறையின் கதவை மூடியுள்ளனர்.
இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஆசிரியை சாந்தி மாணவிகள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். அதோடு சக மாணவிகள் முன்னிலையில் இருவரையும் செருப்பால் அடித்திருக்கிறார்.
அந்த மாணவிகள் இருவரையும் வகுப்பறைக்கு வெளியே உட்கார வைத்து பாடம் எடுத்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் நடந்ததை கூறியிருக்கின்றனர்.
இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரின் தந்தை ஆறுமுகம் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்துள்ளார்.
அந்த மனுவில், “ஆசிரியை சாந்தி இரு மாணவிகளிடமும் வருகை பதிவு போட வேண்டும் என்றால் 100 ரூபாயும், தேர்வு எழுதுவதற்கு 150 ரூபாயும் வசூலித்தார். குறிப்பாக இந்த சம்பவம் நடந்த பிறகு மாணவிகளை வெளியே தரையில் அமர வைத்து பாடம் எடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை இன்று (மே 29) விசாரித்த மனித உரிமை ஆணையர் கண்ணதாசன், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு தலா 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், ஆசிரியர் சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார். Government school teacher who hit female students with slippers