ஒரு காலத்தில் திமுகவுக்கு, ‘சம்பளக் காரங்க கட்சி’ என்றே பெயர். அதாவது அரசு ஊழியர்கள் பல பேர் திமுகவைத்தான் ஆதரித்தார்கள் என்பதாலேயே அக்கட்சிக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. ஆனால் இப்போது அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை கூர்மைப் படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி நிதியமைச்சர் பிடிஆர் தாக்கல் செய்த 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் முக்கியமான கோரிக்கைகள், திமுகவின் கடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கனவே அரசு ஊழியர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு, ‘நிதி நிலைமை சரியானதும் உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்’ என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருந்தார்.
பட்ஜெட்டுக்கு சில நாட்கள் முன்பு, நிதி நிலை முன்னேறியிருக்கிறது என்று பிடிஆர் சொன்னதன் அடிப்படையில் தங்களுக்கு சில சாதகங்களாவது இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்த்தனர் அரசு ஊழியர்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது நடக்காததால். கடுமையான அதிருப்தி அடைந்த அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டங்களில் தீவிரமாக இறங்க முடிவு செய்துவிட்டனர்.

நாளை மார்ச் 28ஆம் தேதி அனைத்து துறை அரசு ஊழியர்களின் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர், அதைத் தொடர்ந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டமும் நடக்கலாம் என்கிறார்கள். இதுகுறித்து ஏப்ரல் முதல் வாரத்தில் அரசு ஊழியர்கள் சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி முடிவு செய்ய இருக்கிறார்கள்.
அரசு ஊழியர் சங்கத்தின் கடலூர் மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணனிடம் மின்னம்பலம் சார்பாக பேசியபோது அவர் நம்மிடம்,

“திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியை காப்பாற்ற வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆறு லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சட்டத்திற்கு உட்பட்டு ஓய்வு ஊதியமாக ரூ 7800 கொடுக்க வேண்டும்.
இதுபோன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (மார்ச் 28) ஒரு நாள் போராட்டம் செய்கிறோம். அடுத்தகட்ட போராட்டம் அரசு எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய அளவில் வெடிக்கும்” என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வி மின்னம்பலத்திடம் அரசு ஊழியர்களின் எண்ண ஓட்டத்தை எடுத்துரைத்தார்.
”மத்திய அரசு மார்ச் 24ஆம் தேதி 4% சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்துள்ளது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று மத்திய அரசு அறிவிக்கிறது. ஆனால் மாநில அரசு இன்னும் அறிவிக்காமல் வருடத்திற்கு ஒரு முறை என்று காலதாமதம் செய்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடிக்கப்பட்ட 52 ஆயிரம் கோடி பணத்தை (PFRDA) ஓய்வூதிய ஒழுங்காற்று ஆணையத்தில் செலுத்தவும் இல்லை. அதில் உறுப்பினராக சேரவும் இல்லை. அந்த பணத்தை எடுத்து ரோலிங் அதாவது வேறு எதற்காகவோ செலவு செய்துள்ளனர் தமிழக ஆட்சியாளர்கள்.

ஆறு லட்சம் காலி பணியிடங்களை நிரப்பி அரசு ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்க வேண்டும், சரண்டர், பென்ஷன் திட்டம், அகவிலைப்படி போன்ற முக்கியமான பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை ஒரு நாள் 69 துறைகளில் பணி செய்யும் அரசு ஊழியர்களும் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.
அரசு ஊழியர்களின் போராட்டத்தை மதித்து கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் ஏப்ரல் முதல் வாரத்தில் செயற்குழுவைக் கூட்டி, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து தொடர் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடுவோம். இதனால் அரசு அலுவலகங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும். அதனால் அரசு திட்டங்களை செயல்படுத்த முடியாமல் போகலாம். அரசு பெரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கிறார் அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி.
சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும் நிலையில் அரசு ஊழியர்களின் போராட்ட அறிவிப்பு திமுக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
–வணங்காமுடி
ராகுல் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
ராகுல் காந்தி விவகாரம்: கருப்பு சட்டையுடன் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்
Comments are closed.