தென் மாவட்டங்களில் உள்ள நான்கு சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Government buses banned from toll booth
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய 276 கோடி ரூபாயை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கப்பலூர், சாத்தூர், எட்டுர்வட்டம், கயத்தாறு, சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி சுங்கச்சாவடிகளை நிர்வகிக்கும் தனியார் நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நேற்று (ஜூலை 9) நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, அரசு போக்குவரத்து கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன.
இதைத்தொடர்ந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், போக்குவரத்து கழகங்கள் நிலுவைத் தொகையை செலுத்தாமல் பிரச்சனையை இழுத்துக் கொண்டே சென்றால். நிலுவைத் தொகை ரூ.300 கோடி. ரூ.400 கோடி என உயர்ந்துவிடும்.
இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை அரசு அதிகாரிகள் புரிந்துகொண்டு விரைந்து செயல்படாமல் இருப்பது கவலையளிக்கிறது.
எனவே கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர், நாங்குநேரி ஆகிய சுங்கச்சாவடிகள் வழியாக நாளை (ஜூலை 10) முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளை இயக்க அனுமதிக்க கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் 276 கோடி ரூபாய் சுங்க கட்டணம் பாக்கியால் அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நாளை நல்ல தீர்வுடன் வருவதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் முறையீடு செய்தார்.
இதைத்தொடர்ந்து நாளை காலை மீண்டும் இந்த வழக்கை விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தார். Government buses banned from toll booth
