ரூ.2000 நோட்டுகளை வாங்க கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்துக் கழகம் உத்தரவு!

Published On:

| By Monisha

conductors do not get rs 2000

பயணிகளிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வாங்க கூடாது என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஏற்கனவே புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அப்போது புதிதாக ரூ.2000 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து அச்சடிப்பதை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. இதனால் 2000 ரூபாய் நோட்டுகள் அரிதாகவே காணப்பட்டன.

இந்நிலையில், நாட்டில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் வரும் அக்டோபர் மாதம் முதல் செல்லாது என்று ஆர்பிஐ அறிவித்திருந்தது. கடந்த மே 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஏடிஎம்-ல் டெபாசிட் செய்தும், நேரடியாக வங்கிகளிலும் மக்கள் மாற்றிக் கொள்ளலாம் எனவும் ஆர்பிஐ அறிவித்திருந்தது.

அதுமட்டுமின்றி செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மக்கள் ரூ.2000 நோட்டுகளை பொருட்கள் வாங்குவது போன்ற பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு மேல் அவகாசம் கொடுக்கப்பட்டும், பலர் இன்னும் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றியும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்தும் வருகின்றனர். சரியாக இன்னும் 4 நாட்களில் ஆர்பிஐ கொடுத்த அவகாசம் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் பயணிகளிடம் இருந்து செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் (நாளை) 2000 ரூபாய் நோட்டுகளை பெற வேண்டாம் என்று கிளை மேலாளர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை மீறி பயணிகளிடம் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றால், அதற்கு உரிய நடத்துநரே பொறுப்பேற்க வேண்டும் என்றும் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மோனிஷா

லியோ ஆடியோ லாஞ்ச்: ரசிகர்களுக்கு படக்குழு கொடுத்த அதிர்ச்சி!

ரூ.12,499 விலையில் வருகிறது Lava Blaze Pro 5G ஸ்மார்ட் போன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share