மனித வாழ்க்கையில் பெரும் சிக்கலாக இருந்துகொண்டிருப்பது குறட்டை. அதனால் வரும் சிக்கல்களை நாகரிகம் கருதி பொதுவெளியில் பேசுவதில்லை.
இது இரவு நேர பஸ், ரயில் பயணங்களிலும், நீண்ட தூர விமான பயணங்களிலும் குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களுடன் சக பயணிகள் தகராறுகள் ஏற்பட்டிருக்கிறது.
பொதுவெளியில் இதைப்பற்றி பேசுவதையே அவமானமாக கருதும் பொது சமூகத்தில் அதை மையப்படுத்தி ஒரு கதை எழுதி அதற்கொரு திரைக்கதை அமைத்து பொருத்தமான நடிகர் நடிகையரைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்து, அய்யய்யோ குறட்டைக் கதையா? என படம் பார்ப்பவர்களை சிரிக்க வைத்து வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில், மணிகண்டன், மீத்தா ரகுநாத், ரமேஷ் திலக், பக்ஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘குறட்டை’யால் ஒரு மனிதன் சந்திக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி தமிழ்நாடு முழுவதும் 127 திரைகளில் வெளியிட்டிருக்கிறது.

நேற்றையதினம் 1.ஃபர்ஹானா, 2 கஸ்டடி, 3.இராவண கோட்டம், 4.மியூசிக் ஸ்கூல், 5.சிறுவன் சாமுவேல் என ஐந்து படங்களுடன் ஆறாவது படமாக குட்நைட் படமும் வெளியாகியுள்ளது.
இந்த ஆறு படங்களில் குட்நைட் படத்தை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க திரையரங்குக்கு வந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
குறட்டையை மையக்கதையாக்கி எடுக்கப்பட்டுள்ள படத்திற்கு குட்நைட் என்கிற நகைமுரணான பெயர் வைத்ததுபோலவே படம் நெடுக காட்சிகளிலும் அந்த உத்தியை இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் விதத்தைப் பார்த்த பார்வையாளர்களின் சிரிப்பலை, கை தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.
நாயகன் மணிகண்டன், நாயகி மீதாரகுநாத் ஆகியோரின் முதலிரவுக் காட்சியில், கணவனிடம் தன்னைப் பற்றிச் சொல்லும்போது சத்தமே பிடிக்காது என்றும் அதனால் வானொலி, திரைப்படம் உட்பட எதிலும் ஆர்வம் இல்லை எனும் காட்சிக்கு திரையரங்கில் கரவொலி காதை பிளந்தது என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.

திரைக்கதை அல்லது அப்படத்தின் நாயகன், நாயகியுடன் தங்களைப் பொருத்திப் பார்க்க பார்வையாளன் முனைந்தால் அப்படம் பெரிய வெற்றி வெறும் என்பார்கள்.
அந்த உளவியலைக் கையிலெடுத்து, குடும்பத்தோடு சிரித்து ரசித்துப் பார்க்கும் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் என்கின்றனர் திரையரங்க உரிமையாளர்கள்.
கோடை விடுமுறையைக் கொண்டாட விரும்பும் குடும்பங்கள் கூட்டாக பார்க்கும் படமாக குட்நைட் இருக்கும் என்றார்கள்.
நேற்றையதினம் பிற்பகல் காட்சியில் இருந்து பார்வையாளர் எண்ணிக்கை அதிகரித்து வசூல் கூடியிருக்கிறது. முதல் நாள் குட் நைட் திரைப்படம் சுமார் 50 லட்சம் ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது.
படத்தின் வசூல் சம்பந்தமாக படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டிருக்கும் சக்தி பிலிம் பேக்டரி உரிமையாளர் சக்தியிடம் கேட்டபோது,
”படத்திற்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. நாளை முதல் காட்சிகளை அதிகரிப்பது, திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும். தமிழ்நாடு மொத்த வசூலை திங்கட்கிழமை அறிவிப்போம்” என்றார்.
இராமானுஜம்
கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸ்: கண்ணீருடன் நன்றி தெரிவித்த சிவகுமார்
