ADVERTISEMENT

லண்டன் செல்லும் மாணவர்களுக்கு ‘குட் நியூஸ்’: இனி ஏமாறத் தேவையில்லை… NISAU – ICEF அமைப்புகளின் ‘மெகா’ கூட்டணி!

Published On:

| By Santhosh Raj Saravanan

Good news for Chennai students going to London

லண்டன்/சென்னை:

வெளிநாட்டில் படித்து, அங்கேயே ஒரு நல்ல வேலையில் அமர வேண்டும் என்பது பல இந்திய மாணவர்களின், குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெருங்கனவு. அதிலும் இங்கிலாந்து (UK) எப்போதும் மாணவர்களின் ‘டாப் சாய்ஸ்’. ஆனால், சமீபகாலமாக விசா கெடுபிடிகள், போலி ஏஜெண்டுகளின் வாக்குறுதிகள் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் எனப் பல சிக்கல்களில் மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது. இது மாணவர்களுக்குப் பெரிய நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யார் இந்த அமைப்புகள்?

ADVERTISEMENT

இங்கிலாந்தில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கான தேசிய அமைப்பான NISAU (National Indian Students and Alumni Union UK) மற்றும் சர்வதேச கல்வி ஆலோசகர் அமைப்பான ICEF (International Consultants for Education and Fairs) ஆகியவை கைகோர்த்துள்ளன. பெர்லினில் நடைபெற்ற வருடாந்திர மாநாட்டில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்தக் கூட்டணியால் மாணவர்களுக்கு என்ன லாபம்?

ADVERTISEMENT

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமே ‘தரம்’ மற்றும் ‘பாதுகாப்பு’ தான்.

போலி ஏஜெண்டுகளுக்கு ‘செக்’:

இந்தியாவில் மூலைக்கு மூலை முளைத்திருக்கும் வெளிநாட்டுக் கல்வி ஆலோசனை மையங்கள், மாணவர்களிடம் ஆசை வார்த்தை கூறிப் பணத்தைப் பிடுங்குவதைத் தடுக்க இந்த அமைப்பு உதவும். ICEF சான்றளிக்கப்பட்ட முகவர்கள் (Certified Agents) மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கையை ஊக்குவிப்பது இதன் முக்கிய திட்டம்.

வேலைவாய்ப்பு உத்தரவாதம் (Employability):

படிப்பு முடிந்ததும் வேலை கிடைக்காமல் தவிக்கும் நிலையை மாற்ற, இங்கிலாந்தின் தொழிலாளர் சந்தைக்கு (Labour Market) ஏற்றவாறு மாணவர்களின் திறனை வளர்ப்பதில் இந்த கூட்டணி கவனம் செலுத்தும்.

NISAU தலைவர் சொல்வதென்ன?

இது குறித்துப் பேசிய NISAU அமைப்பின் தலைவர் சனம் அரோரா (Sanam Arora), “இந்திய மாணவர்கள் இங்கிலாந்து பொருளாதாரத்திற்குப் பெரும் பங்காற்றுகின்றனர். ஆனால், அவர்கள் சரியான வழிகாட்டுதல் இன்றித் தவிப்பதைத் தடுக்க வேண்டும். வெறும் கல்வி மட்டுமின்றி, அவர்கள் சிறந்த வேலைவாய்ப்பைப் பெறுவதையும் உறுதி செய்யவே ICEF உடன் கைகோர்த்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.

ஏன் இது முக்கியம்?

சமீபத்தில் இங்கிலாந்து அரசு விசா விதிகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. பட்டதாரி விசா (Graduate Route Visa) குறித்தும் அவ்வப்போது குழப்பமான செய்திகள் வருகின்றன. இந்த நிலையில், இது போன்ற அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் ஒன்றிணைவது, மாணவர்கள் தவறான பாதையில் செல்வதைத் தடுத்து, அவர்களின் எதிர்காலத்திற்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இனி இங்கிலாந்து செல்லத் திட்டமிடும் மாணவர்கள், தாங்கள் அணுகும் ஏஜெண்டுகள் ICEF அங்கீகாரம் பெற்றவர்களா என்பதைச் சரிபார்ப்பது நல்லது.

கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் சேர்ந்துள்ளனர். அவர்கள் பாதுகாப்பான சூழலில் கல்வியைத் தொடர இந்த முயற்சி ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share