சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. குறிப்பாக பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உலகளாவிய புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் தங்கம் மீதான சந்தைத் தேவையின் உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் முதல் நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 வரை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இன்று (செப்டம்பர் 1) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.9,705க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று (செப்டம்பர் 1) வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.2 அதிரடியாக உயர்ந்து ரூ.136க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி ரூ.75 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து விலை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் மீண்டும் கடந்த 21 ந் தேதி முதல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்த வண்ணம் உள்ளது. கடந்த பத்து நாட்களில் கிராமுக்கும் ரூ.390ம் சவரனுக்கு 3,120ம் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தைச் சேமிப்பாக பார்த்து வரும் நிலையில் தொடர்ச்சியாகத் தங்கம் விலை உயர்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
