இந்தியாவில் ‘ஹால்மார்க்’ அடையாள எண் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருள்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்பனை செய்ய ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது.
2019ஆம் ஆண்டு தங்க நகைகள் தொடர்பாக ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்பில்,
‘2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து நகைக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் தங்கத்துக்கு ஹால்மார்க்கிங் கட்டாயம்’ எனக் கூறப்பட்டது.
அதன் பிறகு கொரோனா பரவல் காரணமாக இந்த காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது மீண்டும் ஹால்மார்க் செய்யப்பட்ட நகைகளைக் கட்டாயமாக்கி காலக்கெடு விதித்துள்ளது ஒன்றிய அரசு.
இதுகுறித்து, ஒன்றிய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
‘இந்தியா முழுவதும் பெரிது, சிறிது என உள்ள அனைத்து நகைக்கடைகளிலும் விற்கப்படும் 14, 18 மற்றும் 22 கேரட் தங்க நகைகளுக்கு 6 இலக்கம் கொண்ட ஹால்மார்க்கிங் கட்டாயம்.
ஹால்மார்க் இல்லாமல் தங்கம் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நகையின் மதிப்பை விட ஐந்து மடங்கு அபராதமும் அல்லது ஒரு வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

ஹால்மார்க்கிங் என்பது தங்கத்தின் தூய்மை சான்றிதழாகும். சிறு விற்பனை கடைகளிலும் தரமான நகைகள் விற்கப்படுவதை ஊக்கப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹால்மார்க்குக்கு 35 ரூபாய் செலவாகும், இதை நகை வாங்குவோர்தான் செலுத்த வேண்டியிருக்கும்.
14, 18 மற்றும் 22 கேரட் நகை இல்லாத மற்ற நகைகளுக்கு ஹால்மார்க் தேவையில்லை. மேலும் 2 கிராம் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள நகைகளுக்கும் ஹால்மார்க் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பு நகைக்கடைகளுக்கு மட்டுமே, வீட்டில் ஏற்கனவே உள்ள நகைகளுக்கு இது பொருந்தாது.
மக்கள் தங்கள் நகைகளை எப்போதும் போலவே விற்பனை செய்துகொள்ளலாம்.
அதேபோல தங்க நகைக்கடன் பெறுவதற்கும் ஹால்மார்க் இல்லாத பழைய நகைகளைப் பயன்படுத்தலாம் என்றும் அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நுகர்வோர் நலத் துறை கூடுதல் செயலாளர் நிதி காரே கூறுகையில்,
‘நுகர்வோர் நலனைக் கருத்தில் கொண்டு தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த ‘ஹால்மார்க்’ அடையாள எண்ணைப் பதிக்கும் திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
256 மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை, வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது.
எனவே, தனித்துவமான 4 அல்லது 6 இலக்க ‘ஹால்மார்க்’ அடையாள எண்கள் (ஹெச்யூஐடி) பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப்பொருள்களை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும்.
2022-23ஆம் ஆண்டில் மட்டும் நேற்று வரை ரூ.10.56 கோடி தங்க நகைகள் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டது’ என்று கூறியுள்ளார்.
ராஜ்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
எந்த கொம்பனானாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்: முதல்வர்