உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் இந்தியா, தற்போது ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால் சர்வதேச அளவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலையால் உலகில் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம் உருவாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பூமியின் வெப்பநிலை உயர்வு காரணமாக உலக நாடுகள் வறட்சியையும், வெள்ள பாதிப்பையும் சந்தித்து வருகின்றன. அதன் வெளிப்படாக அரிசி, தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே உலக நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை இந்தியா தடை செய்துள்ளது.
இந்த நிலையில், அதி தீவிர வெப்ப அலை காரணமாக ஐரோப்பாவில் தானியங்களின் உற்பத்தி 60% குறைந்துள்ளதாகவும், கடும் வெப்பம் ஐரோப்பாவை வாட்டி வதைப்பதாகவும் ஐரோப்பிய விவசாய அமைப்பான கோபா கோகெகா அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், கடினமான காலம் இன்னும் முடிவடையவில்லை என்று கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், ஐரோப்பாவில் நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக, உலக உணவு நெருக்கடி இன்னும் மோசமாகலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சமீபத்தில் சர்வதேச நாணய நிதியம் (IMF) அரிசி ஏற்றுமதி மீதான கட்டுப்பாட்டை நீக்குமாறு இந்தியாவை வலியுறுத்தியது.
இந்தக் கட்டுப்பாடு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார நிபுணரான ஆலிவர் பேசும்போது, ”இந்தக் கட்டுப்பாடுகள் உலகின் பிற பகுதிகளில் உணவுப் பொருட்களின் விலையில் ஏற்ற இறக்கத்தை அதிகரிக்கக் கூடும்” என்றார்.
இந்தியா பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு ஜூலை 20ஆம் தேதி தடை விதித்தது.
பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், அரிசி தேவைக்கு இந்தியாவை நம்பி இருக்கும் நாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.
காலநிலை மாற்றம் தீவிரமடையும்போது உணவுப் பாதுகாப்பில் இத்தகைய சிக்கல்கள் ஏற்படும் என்று வல்லுநர்கள் முன்பே கணித்திருக்கிறார்கள்.
அந்தந்த நாடுகளின் வளங்களில் தட்டுப்பாடு ஏற்படும்போது ஏற்றுமதி பாதிக்கப்பட்டு அதனால் உலக அளவில் பிரச்சினைகள் வரலாம் என்பதும் வல்லுநர்களின் யூகமாக இருந்தது.
ஆனால், இது எங்கோ எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வாக அல்லாமல் இப்போதே நிகழத் தொடங்கியிருப்பது பிரச்சினையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
ராஜ்
கிளாம்பாக்கம் பேருந்து முனையம்: அமைச்சரின் அப்டேட்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
“நயன்தாரா பட ப்ரமோஷன்களில் பங்கேற்றால் நல்லா இருக்கும்”- விஷால்
