திமுகவில் இளைஞர்களுக்கு மூத்த தலைவர்கள் வழிவிட வேண்டும் என்று மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது மீண்டும் கவனத்தை பெற்றுள்ளது.
வேலூர் மாநகர திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 11) வேலூரில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
இதில் திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு பேசுகையில், “அரசியலில் சில சந்தர்ப்பங்களில் வெறுப்பு, தோல்வி, அவமானம் என எல்லாமே வரும். நான் படாத அவமானமா? நான் படாத தோல்வியா? நான் சந்திக்காத எதிர்ப்புகளா?. ஆனால் திமுக என்றால் இவையெல்லாம் போய்விடும்.
எனவேதான் சொல்கிறேன். இயக்கத்தில் பிடிப்பு வேண்டும்… இளைஞர்கள் இன்று வருகிறார்கள். அவர்களை வரவேற்கிறேன். ஏனென்றால் நாங்களும் இளைஞர்களாகத்தான் வந்தோம்.
நாங்கள் மாணவர் திமுகவில் இருந்த போது, ‘நாற்றங்காலில் இருக்கிற பயிரை பிடுங்கி சேற்றில் நட்டால்தான் பலன் கொடுக்கும். நாற்றங்காலாகவே விட்டுவிட்டால் பாழாகிவிடும். ஆகவே தகுந்த நேரத்தில் உங்களை கட்சியில் சேர்த்து பார்த்துக் கொள்கிறேன்’ என்று அண்ணா சொன்னார்.
எனவே, கொள்கையை விடாமல் இருக்க வேண்டும். இளைஞர்கள் வரவேண்டும், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இளைஞர்கள் இல்லாமல் இருந்தால் கட்சியே போய்விடும்.
ஆனால் வருகிற இளைஞர்கள் தடம் பார்த்து வாருங்கள். கட்சியை நினைத்து வாருங்கள் வந்த உடனேயே என்ன கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். உங்களை விட இங்கு உழைத்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
அடிபட்டவர்கள், உதைப்பட்டவர்கள், கட்சியினால் பொண்டாட்டி பிள்ளைகளிடம் கெட்ட பேர் வாங்கியவர்கள் என நிறைய பேர் இருக்கிறார்கள், அவர்களும் இந்த கட்சிக்காக தியாகம் செய்திருக்கிறார்கள்.
இளைஞர்களுக்கு வழிவிட்டாகவேண்டும். இந்த நிலைமையை நாம் நினைத்தால் தான் ஒரு இயக்கத்தை நிலைத்து நிற்க வைக்க முடியும்” என்று கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற, அமைச்சர் எ.வ.வேலு எழுதிய, ‘கலைஞர் எனும் தாய்’ நூல் வெளியீட்டு விழாவில், அமைச்சர் துரைமுருகனை பழைய ஸ்டூடெண்ட் என்று நடிகர் ரஜினி குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், ‘பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை’ என்று காட்டமாக விமர்சித்திருந்தார்.
ரஜினியைப் பற்றி துரைமுருகன் அப்படிப் பேசியதால் கோபம் அடைந்த முதல்வர் ஸ்டாலின், துரைமுருகனிடம் ரஜினியை தொலைப்பேசியில் அழைத்துப் பேசச் சொன்னார்.
அதன்படி அமைச்சர் துரைமுருகனும் ரஜினியை அழைத்துத் தான் அப்படிப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்தது குறித்து நமது மின்னம்பலம்.காம் தளத்திலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதையடுத்து ரஜினியும், துரைமுருகனும் வெவ்வேறு இடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, ‘எங்களது நட்பு தொடரும்’ என்று கூறியிருந்தனர். குறிப்பாக, நகைச்சுவையை பகைச்சுவையாக்க வேண்டாம் என்று துரைமுருகன் தெரிவித்திருந்தார்.
கடந்த 27ஆம் தேதி அமெரிக்கா புறப்படுவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலினும் இதையே தான் தெரிவித்திருந்தார்.
முன்னதாக ரஜினி பேசியதை குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி, “இளைஞர்கள் வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கு வழிவிட்டு வழிநடத்தி கைபிடித்து அழைத்து செல்ல வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்தசூழலில் தான் துரைமுருகனின் பேச்சு திமுகவில் மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
ஸ்டாலினை எதிர்த்து திருமா மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறாரா?: அமைச்சர் முத்துசாமி பேட்டி!