தமிழக அரசின் பொங்கல் தொகுப்புடன் அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் ரூ.5,000 வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலத்தில் இன்று டிசம்பர் 22-ந் தேதி செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது;
திமுகவுக்கு எதிராக- திமுக ஆட்சியை அகற்ற விரும்பும் கட்சிகள், அதிமுக- பாஜக கூட்டணிக்கு வரலாம். திமுகவால் இனிமேல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவே முடியாது.
ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புடன் ரூ.5,000 வழங்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தை 125 நாட்களாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதனை பாராட்ட திமுகவுக்கு மனமில்லை. இத்திட்டத்தில் மகாத்மா காந்தியடிகள் பெயர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்துகிறது. அதே போல டிசம்பர் 26-ந் தேதி முதல் ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதையும் மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
விஜய்யின் தவெக தூய கட்சியா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதிமுக- பாஜக கூட்டணிக்கு தவெக வரவேண்டும் என நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்திருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.
SIR என்பது அனைத்து கட்சிக்கும் பொதுவான ஒரு நடைமுறை. உண்மையான வாக்காளர்கள் விடுபட்டிருந்தால் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம். இறந்தவர்கள், இரட்டை வாக்காளர்களை வைத்து இதுவரை திமுக ஜெயித்துக் கொண்டிருந்தது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
