ஈரோடு அருகே மேம்பாலத்தின் கீழ் தூங்கிக் கொண்டிருந்த பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் குறித்து சித்தோடு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேஷ், இவரது மனைவி கீர்த்தனா. இந்த தம்பதிக்கு 5 மற்றும் ஒன்றரை வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த தம்பதியினர் ஈரோடு மாவட்டம் சித்தோடு கோணவாய்க்கால், லட்சுமிநகர் பகுதியில் உள்ள சேலம்–கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாலத்தின் கீழ் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
நேற்று இரவு வழக்கம்போல் இரண்டு குழந்தைகளையும் கொசுவலையில் உறங்க வைத்துவிட்டு பெற்றோர் கொசுவலைக்கு வெளியே உறங்கியுள்ளனர்.
அதிகாலை எழுந்தபோது கொசுவலை கிழிக்கப்பட்டு பெண் குழந்தை வந்தனா காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையை தேடி பார்த்து கிடைக்காத நிலையில் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர்.
சித்தோடு காவல்துறையினர் பெண் குழந்தை கடத்தல் சம்பவம் குறித்து அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
