இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருக்கும் போது, பேட்டிங் பயிற்சியாளர் தேவை இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் காவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கியது. இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணி தோல்வி குறித்து கவாஸ்கர் கூறும் போது, “இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருக்கும் போது, பேட்டிங் பயிற்சியாளர் என்ற ஒருவர் தேவையில்லை.
ராகுல் டிராவிட் ஆட்டக்காரர்களிடம் ஒன்று சொல்லும் போது, பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் ஏதாவது சொன்னால் ஆட்டக்காரர்கள் குழப்பமடைவார்கள். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்திய அணியில் 14 வீரர்கள் இடம்பெற்றுள்ள போது, பேட்டிங், கோச்சிங், மனநல குழுவில் 15 பேர் இடம் பிடித்துள்ளனர். இதனால் இந்திய அணி விளையாடும் போது, உடை மாற்றும் அறையில் அதிக குரல்கள் எழுகின்றன.
கோச்சிங் வீரர்கள் ஆட்டக்காரர்களிடம் ஒவ்வொரு கருத்துகளை கூறும்போது, வீரர்கள் குழப்பமடைகின்றனர்.

1983,1985-ஆம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி விளையாடிய போது இவ்வளவு பயிற்சியாளர்கள் இருந்ததில்லை.
இந்திய அணிக்கு எத்தனை பயிற்சியாளர்கள் தேவை என்பதை முதலில் பிசிசிஐ புரிந்து கொள்ள வேண்டும். இந்த குழப்பத்தினால் தான் இந்திய அணி ஆட்டக்காரர்கள் களத்தில் சிறப்பாக விளையாடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்