உலக பணக்காரர் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர் மற்றும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் புளூம்பெர்க் பில்லியனர்கள் தரவரிசை பட்டியலின் தகவல் அடிப்படையில் ஆசிய கோடீஸ்வரர் அதானி 137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருந்தார். இதன்மூலம் உலக பணக்காரர் பட்டியலில் முதல் மூன்று இடத்தில் இடம் பிடித்த முதல் ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.
மேலும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் 251 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதல் இடத்திலும், அமேசான் நிறுவனர் மற்றும் சிஇஓ ஜெஃப் பெசோஸ் 153 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாம் இடத்திலும் இருந்தனர்.

தற்போது, ஃபோர்ப்ஸின் உலகப் பணக்காரர்கள் பட்டியலின் படி அதானி மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரது சொத்து மதிப்பு தற்போது 155.7 பில்லியன் டாலராக உள்ளது.
பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் 273.5 பில்லியன் டாலர் சொத்துகளுடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளார். லூயிஸ் வுயூட்டனின் நிறுவனர் பெர்னார்ட் அர்னால்ட் 155.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் 149.7 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் தற்போது நான்காவது இடத்தில் உள்ளார்.
ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்த பட்டியலில் 92.6 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எட்டாவது இடத்தில் உள்ளார்.
மோனிஷா
