பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து அடுத்த வாரம் சௌரவ் கங்குலி விலகவுள்ள நிலையில் பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷாவும் தேர்வானார்கள்.
சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

தற்போது கங்குலிக்கு பதிலாக 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் விளையாடிய ரோஜர் பின்னி புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
பிசிசிஐ தலைவர் பதவியில் நீடிக்க கங்குலி விரும்புவதாகவும் செய்திகள் வெளியாகின.
இது குறித்து சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்குலி, “ காலம் முழுவதும் விளையாடிக் கொண்டே இருக்க முடியாது.
அதே போல் வாழ்நாள் முழுவதும் நிர்வாகியாகவும் இருக்க முடியாது. ஆனால் இரண்டையும் பார்த்ததில் மகிழ்ச்சி” என்று கூறி தலைவர் பதவி முடிவுக்கு வரவிருப்பதை கங்குலி உறுதிப்படுத்தினார்.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 15) கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகக் கூறியுள்ளார். இது குறித்து அவர் “, பெங்கால் கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளேன்.
இதற்காக அக்டோபர் 22-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளேன். ஏற்கெனவே 5 ஆண்டுகள் பெங்கால் கிரிக்கெட் வாரிய பொறுப்பிலிருந்துள்ளேன். லோதா கமிட்டி விதிகளின்படி, மேலும் 4 ஆண்டுகள் பதவியில் தொடர முடியும்” என்று கூறியுள்ளார்.
அக்டோபர் 11 ஆம் தேதி ஐபிஎல் தலைவராவதற்கான பிசிசிஐ-ன் வாய்ப்பை அவர் நிராகரித்த நிலையில், தற்போது அவரின் இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் கங்குலி பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே 2015 – 2019 ஆம் ஆண்டு வரை பெங்கால் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடர் நாயகன் விருது வென்ற வீரர்கள்!
இந்தியை தொடர்ந்து பிற மொழிகளிலும் எம்பிபிஎஸ் படிப்பு : அமித்ஷா