“இளையராஜாவுக்கு பணத்தாசை இல்லை. எங்களிடம் செலவு செய்ய முடியாமல் எக்கச்சக்கமான பணம் கொட்டிக்கிடக்கிறது” என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.
உலக சர்வதேச தமிழ் திரைப்பட சங்கத்தின் வீட்ஃபா முதலாவது சர்வதேச மாநாடு சென்னையில் நேற்று (ஏப்ரல் 20) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளரும் இளையராஜாவின் சகோதரருமான கங்கை அமரன், “கதை ஆசிரியர்களுக்கு கதையில் உரிமை உண்டு. எத்தனை மொழிகளில் படம் எடுத்தாலும் அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், பாட்டுக்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை. Gangai Amaran says Ilaiyaraaja

‘அன்னக்கிளி’, ‘பத்திரகாளி’ படப்பிடிப்பு பூஜையின் போது, எங்களுக்கு 10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தார்கள். பாடல்கள் பெரிய அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், எங்களுக்கு அவர்கள் ஒரு ரூபாய் கூட தந்ததில்லை.
அதனால் தான் என் அண்ணன் இளையராஜா கான்ட்ராக்ட் போடும்போது, மியூசிக் ரைட்ஸ் வாங்கி விடுவார். கச்சேரிகளில் எங்கள் பாடல்களை பாடுபவர்கள் ராயல்டி கட்டத் தேவையில்லை.
ஆனால், படத்தில் அப்படி இல்லை. 7 கோடி ரூபாய்க்கு நீங்கள் ஒரு மியூசிக் டைரக்டரை படத்தில் ஒப்பந்தம் செய்கிறீர்கள். ஆனால், அவரது பாட்டிற்கு கைத்தட்டல் விழாமல், எங்கள் பாட்டிற்கு கைத்தட்டல் விழுகிறது, விசிலடிக்கிறார்கள், நடனமாடுகிறார்கள். அதற்கான கூலி எங்களுக்கு வரவேண்டாமா?
இளையராஜாவிடம் பெர்மிஷன் கேட்டால் அவர் ஃபிரியாக கொடுத்துவிடுவார். அவரிடம் அனுமதி வாங்காமல் பாடல்களை பயன்படுத்துவதால் தான் கோபம் வருகிறது.
எங்களுக்கு பணத்தாசை இல்லை. செலவு பண்ண முடியாமல் எக்கச்சக்க பணம் கொட்டிக்கிடக்கிறது. சில பேர் அஜித் படம் என்பதால், இளையராஜா ராயல்டி கேட்கிறார் என்கிறார்கள். அதெல்லாம் கிடையாது, எங்கள் பாட்டு அந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் ராயல்டி கேட்கிறோம்.
எங்களுடைய சொத்தை எப்படி இயக்குனர் திருடலாம்? எங்கள் பாட்டை பயன்படுத்தும்போது மியூசிக் டைரக்டருக்கு உறுத்தலாக இருக்காதா?” என்று கங்கை அமரன் தெரிவித்தார்.
