அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் உள்ள பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளிடையே இன்று (மார்ச் 23) தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ள நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இந்த கூட்டத்தைப் புறக்கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தொகுதிப் பங்கீடு இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் இந்தப் கூட்டத்தை புறக்கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜகவிற்கு 27 தொகுதிகளும், பாமகவிற்கு 18 தொகுதிகளும், அமமுகவிற்கு 11 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
அதே சமயம் என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், இன்றைய கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தமிழ் மாநில காங்கிரஸ், ‘இரட்டை இலை’ சின்னத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்த முறை தமாகாவிற்கு அதிக இடங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 3 தொகுதிகள் வரை மட்டுமே ஒதுக்கப்படும் எனத் தகவல் வெளியானது. தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தியே ஜி.கே. வாசன் கூட்டத்தைப் புறக்கணித்ததற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.
அதிமுக அலுவலகத்தில் பாஜக, பாமக மற்றும் அமமுக தலைவர்கள் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், தமாகாவின் இந்தத் திடீர் முடிவு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜி.கே. வாசன் தனித்துப் போட்டியிடுவாரா அல்லது கூட்டணியில் நீடிப்பாரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
