இலங்கையின் முக்கிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான காலே கிரிக்கெட் மைதானம் வரும் நவம்பர் மாதத்துடன் இடிக்கப்படவுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற இலங்கையின் காலே மைதானத்துக்கு மிக அருகில், 17ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்களால் கட்டப்பட்ட டச்சு கோட்டை ஒன்று உள்ளது. 2004ஆம் ஆண்டு சுனாமி தாக்கியதில் இந்த மைதானம் சேதமடைந்தது. அதன் பிறகு இங்கு சில புதிய காலரிகள் கட்டப்பட்டன. மைதானத்தில் கட்டப்பட்டுள்ள இந்தப் புதிய காலரிகளால் டச்சுக் கோட்டையின் தோற்றம் மறைக்கப்பட்டது. யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்கள் மற்றும் கட்டடங்களில் ஒன்றாக இந்தக் கோட்டை உள்ளதால், இந்த பெவிலியன்களை உடனடியாக அகற்றாவிட்டால் பாரம்பரிய கட்டட அந்தஸ்தை விலக்கிக்கொள்வதாக இலங்கை அரசுக்கு யுனெஸ்கோ எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து வரும் நவம்பரில் இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, காலே மைதானத்தில் போட்டிகளை நடத்துவதில்லை என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. மேலும் கோட்டையை மறைக்கும் காலரிகளையும் இடிக்கத் திட்டமிட்டுள்ளது.
இலங்கை அரசின் இந்த முடிவால் இலங்கையின் முன்னாள் வீரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தாங்கள் நாட்டுக்குப் பெருமையைச் சேர்த்த காலே மைதானத்தில் தொடர்ந்து போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் ராசியான மைதானமாகக் கருதப்படும் காலே மைதானம் 1998ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த மைதானத்தில் இலங்கை அணி இதுவரை 31 டெஸ்டில் விளையாடி 18 போட்டிகளில் வெற்றியையும் மற்றும் ஆறு போட்டிகளை டிராவும் செய்துள்ளது. 2010ஆம் ஆண்டு இலங்கையின் முத்தையா முரளிதரன் இந்த மைதானத்தில்தான் 800ஆவது விக்கெட்டை வீழ்த்தினார். ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்ன் தனது 500ஆவது டெஸ்ட் விக்கெட்டை இந்த மைதானத்தில்தான் வீழ்த்தினார். கடைசியாக இலங்கை அணி இந்த மைதானத்தில் கடந்த வாரம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.,”
