பீமா கோரேகான் வெடிகுண்டு சம்பவத்தில் மாவோயிஸ்ட் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மனித உரிமைப் போராளிகளான பத்திரிகையாளர் நவ்லகா, பேராசிரியர் ஆனந்த் தெல்தும்பே மற்றும் பாதிரியாரான ஸ்டேன்ஸ் ஸ்வாமி ஆகியோரை இன்று (நவம்பர் 22) வரை கைது செய்யக் கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் நேற்று (நவம்பர் 21) தடை விதித்துள்ளது.
புனேவில் எல்கார் பரிஷத் என்ற நிகழ்ச்சி 2017 டிசம்பர் 31ஆம் தேதியன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியைத் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தினர் ஆதரித்துள்ளனர். இந்த நிகழ்ச்சி பின்னர் வன்முறைக்களமாக மாறியுள்ளது. எல்கார் பரிஷத்தில் இந்த மனித உரிமைப்போராளிகளும் கலந்து கொண்டதாக போலீசார் முதல் தகவல் அறிக்கையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக 5,000 பக்கங்களுக்கு குற்றப்பத்திரிகையையும் போலீசார் தயாரித்துள்ளனர். அந்தக் குற்றப்பத்திரிகையில் மனித உரிமைப்போராளிகள்தான் கலவரத்தை தங்களது ஆவேசப் பேச்சுகளால் உருவாக்கியதாகக் கூறியுள்ளனர்.
போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் கௌதம் நவ்லகா, பேராசிரியர் ஆனந்த் தெல்தும்பே மற்றும் ஸ்டேன்ஸ் ஸ்வாமி ஆகியோர் தவிர, அருண் பெராரியா, வெர்னான் கான்சால்வ்ஸ் .சுதா பரத்வாஜ், வரவர ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டு முன்னதாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் சமீபத்தில் இவர்கள் போலீஸ் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் ஆனந்த் தெல்தும்பேவும் ஸ்வாமியும் இன்னும் கைது செய்யப்படவில்லை. முதலில் கைது செய்யப்பட்ட நவ்லகா பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது கௌதம் நவ்லகா, பேராசிரியர் ஆனந்த் தெல்தும்பே மற்றும் ஸ்டேன்ஸ் ஸ்வாமி ஆகியோரை இன்று (நவம்பர் 22) வரை கைது செய்யத் தடை விதித்து மும்பை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
