gசிறப்புக் கட்டுரை: ரெடி…டேக்…ஆக்‌ஷன்!

Published On:

| By Balaji

முன்பெல்லாம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தலையை சுற்றி காதை தொடச் சொல்வார்களாம். பிறகு எல்.கே.ஜி, யூ.கே.ஜி வந்தது. இப்போது குழந்தைகளை பொருளாதார பந்தயத்துக்கு தயார் படுத்தும் வெறிபிடித்த பெற்றோர்களால் ப்ரீ.கே.ஜி கொண்டுவந்தார்கள். இன்னும் இப்படியே போனால் புள்ளத்தாச்சி, பொண்ணு பாத்தாச்சி என பள்ளியில் சீட் பிடிக்க முந்தய தலைமுறையிலிருந்தே முன்பதிவு செய்யத் துவங்கிவிடுவார்கள் போல.

குழந்தைகளின் குழந்தை பருவத்தை கொலை செய்வதை விடவும் பெரிய குற்றம் ஒன்று இவ்வுலகில் இருப்பதாகப் படவில்லை. வேலைக்கு செல்லும் பெற்றோர்கள் குந்தைகளை ’ப்ளே ஸ்கூல்’ எனப்படும் விளையாட்டு பள்ளியில் விட்டுவிட்டு செல்வது தவிர்க்க முடியாத ஒன்று தான். என்றாலும் உண்மையில் அப்படியான பள்ளிகள் குழந்தைகளை எப்படி கையாள்கின்றன…? அவர்களின் மனநலன் சார்ந்த விசயங்களை எப்படி எதிர்கொள்கின்றன…? பள்ளி ஆசிரியர்களுக்குத் தேவையான சகிப்புத் தன்மை எந்த அளவிற்கு உள்ளது..? என்பதெல்லாம் சந்தேகத்துக்குறிய விசயம் தான்.

சீனாவில் அப்படியொரு உறைவிட குழந்தைகள் பள்ளியில் உள்ள பிள்ளைகளின் துரு துரு நாட்களையும், ஆசிரியர்கள் அவர்களை கையாளும் விசயங்கள் பற்றியும் பிள்ளை மொழியில் பேசுகிறது இப்படம்.

லிட்டில் ரெட் பிளவர்ஸ் (2006)

சீனாவின் பனிபொழியும் ஒரு இரவில் குழந்தைகள் உட்கார்ந்து ஆடும் மரக்குதிரையொன்று அசைந்து கொண்டிருக்கிறது. அதை நான்குவயது பாங் குயிங் பார்த்துக் கொண்டிருக்கிறான்.

முதல் நாள் பள்ளிக்கு செல்வது என்பது, நமது அருகிலேயே இயங்கிக் கொண்டிருந்த வேறுஒரு உலகில் நுழைவதைப் போல ஆச்சர்யமானது. அது விசித்திரமான பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நம்மில் பலரின் முதல் நாள் பள்ளி அனுபவம் கண்ணீரும் பிடிவாதமுமாக துவங்கியிருக்கும் பின் அந்த சூழல் பழகிப்போன பிறகு தொடர்ந்த நமது நாட்கள் அழகானவை.

1949ல் துவங்குகிறது படம். நான்கு வயதான பாங் குயிங்கை அவனது அப்பா உறைவிடப்பள்ளி ஒன்றில் சேர்த்துவிடுகிறார். பள்ளி வளாகத்திற்குள்ளே வர மாட்டேன் என முரண்டு பிடிக்கிறான் பாங், அப்பா அவனைத் தூக்கிக் கொண்டு உள்ளே வருகிறார். அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் பாங்கை ஆசிரியர் மிஸ் லி வரவேற்கிறாள்.

பாங் எதையும் எளிதில் கற்றுக் கொள்ள மறுக்கும் பிடிவாதக் காரன், மற்ற குழந்தைகளுடன் கலந்து போவதில் அவனுக்கு சிக்கல் இருக்கிறது.

ஒழுக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அப்பள்ளியின் ஆசிரியர்கள் கனிவும் கண்டிப்பும் கொண்டவர்கள். குழந்தைகள் அவர்களே உடை மாற்றிக் கொள்வது, உணவை வீணடிக்காமல் சாப்பிடுவது, சுத்தமாக சோப் போட்டு கைகால்களை கழுவிக் கொள்வது, நேரத்திற்கு மலஜலம் கழிப்பது. சேர்ந்து பாடி ஆடி விளையாடுவது என எல்லா பழக்கவழக்கங்களையும் பிள்ளைகளுக்கு கற்றுதருகிறார்கள்.

அதிலும் நரிக் கதையொன்றை விளையாட்டு கலந்து ஆசிரியை சொல்லிக் கொடுக்கும் காட்சியில் ”என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கோங்க மிஸ்” என நமது உதடுகள் தானாக மழலை மொழிபேசும். இப்படியான விளையாட்டுகளிலும் பாங் கலந்து கொள்ள மாட்டான். அந்த சுட்டிப் பயலுக்கு அங்கிருந்து எப்படி தப்பிப்பது என்பதே நோக்கமாக இருப்பதால் அழுது கொண்டிருப்பான்.

ஒரு நாள், ஆசிரியை மற்ற பிள்ளைகளின் முன்பாக பாங்கை உடைகளைக் கழட்டி காட்டும்படியாகச் சொல்கிறாள். பனியனை தலைவழியாகக் கழட்ட முடியாமல் தலையில் பனியன் சிக்கிக் கொள்கிறது. தானாகக் கற்றுக் கொள்ளட்டும் என ஆசிரியையும் உதவாமல் விட்டுவிடுகிறார். பிறகு அவனே போராடி கற்றுக் கொண்டுவிடுகிறான்.

குழந்தைகள் அனைவரும் கட்டிலில் படுத்து உறங்கும் போது குயிங் அருகில் படுத்திருக்கும் சிறுமியிடம் ரகசியம் பேசுகிறான்.அவள் அவனது முதல் தோழியாகிறாள். அவன் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெளியே போய் பனி மழையில் தனது பிஞ்சு காலில் நடந்து பார்க்கிறான்.

சிறுமிகள் சிலர் அவனை உயரமான மேஜை மீதேற்றி விடுகிறார்கள் ஜன்னலில் நின்று வேடிக்கை பார்க்கிறான் பாங். அங்கு டீச்சர் வருவதை கண்ட சிறுமிகள் அவனை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிடுகிறார்கள் அவன் மேலே இருந்து தொப்பென குதிக்கிறான்.

கராத்தே செய்வது போல கை கால்களை ஆட்டி மற்ற பிள்ளைகளை விரட்டுகிறான். அவனது குறும்பு இரசிக்கும் படியாக இருந்தாலும் அவனை கட்டுப்படுத்த முடியாமல் ஆசிரியைகள் தடுமாறிப் போகிறார்கள்.

அந்தப் பள்ளியில் ஒரு நடைமுறையிருக்கிறது., வகுப்பில் ஒழுக்கமாக நடந்து கொள்ளும் மாணவர்களைப் பாராட்டும் விதமாக அவர்களுக்குக் காகிதத்தில் செய்த சிவப்பு மலர்களைப் பரிசாகத் தருகிறார்கள், அறிவிப்பு பலகையிலும் மாணவர்கள் பெயருக்கு நேராக அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டுகிறார்கள், எந்த மாணவன் அதிக மலர்களைப் பரிசாக வாங்குகிறானோ அவனே வகுப்பின் சிறந்த மாணவன். பாங் அடங்காத சிறுவனாக இருப்பதால் அவனுக்கு ஒரு மலர் கூடக் கிடைப்பதில்லை. அது பற்றி அவன் அலட்டிக் கொள்வதில்லை.

ஒரு நாள் காற்றில் பறந்து வந்து வெளியே கிடக்கும் சிவப்பு காகித மலர் ஒன்றைக் கண்டெடுக்கும் பாங் அதை ஒரு துணியில் ஒளித்து வைத்து தனது தோழிக்கு பரிசாகத் தருகிறான், அவள் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள்.

படத்தின் முடிவில் பள்ளியை விட்டு வெளியே ஒடி மறைவான ஒரு இடத்தில் சாய்ந்து உறங்கத் துவங்குகிறான். அவனை காணாமல் ஆசிரியர்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் ஒருவருக்கொருவர் காரணமில்லாமல் சண்டையிட்டுக் கொள்வது. கூடி கூடி ரகசியம் பேசுவது. டாக்டர் நோயாளி என போலியாக ஊசி போட்டு விளையாடுவது என படம் முழுக்க குழந்தைகளின் சுதந்திர உலகில் நம்மை உலவவிடுகிறார் இயக்குனர் ‘ஸ்சாங் யுவான்’.

தங்கக் குதிரை விருது (2006), பசிபிக் மெரீடியன் இண்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் ஆஃப் ஆசிய பசிபிக் கண்ட்ரீஸ் விருது (2006), ஷாங்காய் பிலிம் கிரிட்டிக்ஸ் விருது (2006), பெர்லின் திரைப்படவிழாவில் பனோரமா பிரிவில் விருது என குழந்தைகள் கையில் இனிப்புகளை அள்ளுவது போல பரிசுகளை அள்ளியது ’லிட்டில் ரெட் பிளவர்ஸ்’.

இப்படத்தில் இத்தனை குழந்தைகளை கேமிராவுக்குள் சரியான பதத்தில் மலரச் செய்ததே இயக்குனர் ‘ஸ்சாங் யுவான்’னுக்கு சவாலான காரியம் தான். குழந்தைகளை நடிக்க வைப்பது எவ்வளவு சுலபமோ அதே அளவு அது கடினமானதும் கூட. பிள்ளைகள் ஒத்துழைத்தால் நாம் எதிர் பார்ப்பதைவிட அருமையாக நடித்து அசத்துவார்கள். முரண்டுபிடித்தால் பிடித்தது தான். குழந்தைகளிடம் போலியாக நீங்கள் எதையும் பெற முடியாது. ஏனெனில் அவர்கள் குழந்தைகள்.

-சத்யா சுரேஷ்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share