இன்று முழு ஊரடங்கை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் நேற்று மது விற்பனை அதிகரித்தது.
தமிழகம் முழுவதும் மார்ச் 25ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. முழு ஊரடங்கு உத்தரவால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், கொரோனா பரவல் அதிகரித்ததால், வாரத்தில் ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இதனால் கடந்த சில ஞாயிற்றுக் கிழமைகளில் இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு முழு ஊரடங்கை காவல் துறையினர் கடுமையாக அமல்படுத்தினர். அதேபோல மதுக்கடைகளும் மூடப்பட்டன.
இந்த நிலையில் இன்று (ஜூலை 19) முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. விழாக்காலங்களில் விற்பனை செய்யப்படும் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 42 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
திருச்சியில் 41.3 கோடி ரூபாய், சேலத்தில் 40.4 கோடி ரூபாய், கோவையில் 37.9 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னை சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்தில் 21.2 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்துள்ளது. ஐந்து மண்டலங்களிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 182.9 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
ஜூலை மாதம் முதல் சனிக்கிழமை 171 கோடி ரூபாய்க்கும், இரண்டாவது சனிக் கிழமை 178 கோடி ரூபாய்க்கு மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
