2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் டிசம்பர் 10-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் கொடுக்கலாம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. திமுக கூட்டணி, அதிமுக- பாஜக கூட்டணி ஆகியவற்றில் மேலும் சில கட்சிகள் இடம் பெறுமா? என்பது இனி வரும் நாட்களில்தான் தெரிய வரும். அதேபோல விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டு தவெக தலைமையிலான கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் குறித்தும் இனிதான் தெரிய வரும். நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்துப் போட்டியிடுவதால் வேட்பாளர்களையே அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வேட்பு மனுக்கள் பெறப் போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 10.12.2025 (புதன்கிழமை) முதல் 18.12.2025 (வியாழக்கிழமை) வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை அடையாறில் அமைந்துள்ள தலைமைக் கழக அலுவலகத்தில் விருப்ப மனு கட்டணத்தை செலுத்தி விண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு கட்டணமாக ரூ10,000; புதுச்சேரியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் ஜனவரி 3-ந் தேதிக்குள் கொடுக்க வேண்டும் எனவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
