பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் ஃபிரான்சுவா பேரூ தோல்வி அடைந்தார். இதனால் ஃபிரான்சுவா பேரூ தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பிரான்ஸில் 12 மாதங்களில் 3 பிரதமர்கள் பதவி இழந்துள்ளனர்.
ஐரோப்பாவில் பொருளாதார பலம் கொண்ட நாடுகளில் ஒன்று பிரான்ஸ். ஆனால் அந்நாட்டில் அரசியல் நிலையற்ற தன்மை நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம், காஸா மீதான இஸ்ரேல் யுத்தம், அமெரிக்காவின் இடைவிடாத வரிவிப்பு போர் உள்ளிட்டவை பிரான்ஸின் பொருளாதாரத்துக்கு சவாலாக உருவெடுத்துள்ள நிலையில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது.
பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த கேப்ரியல் அட்டல், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டு நாடாளுமன்ற தேர்தல் செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மைக்கேல் பார்னியாவை பிரதமராக தேர்வு செய்தார் அதிபர் மேக்ரான்.
ஆனால் பார்னியாவுக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அது வெற்றி பெற்றது. இதனால் பார்னியாவும் பதவியை பறிகொடுத்தார்.
பார்னியாவைத் தொடர்ந்து ஃபிரான்சுவா பேரூ, பிரதமரானார். இவர் அறிமுகப்படுத்திய நிதி சார்ந்த முடிவுகள் பிரான்ஸில் கடும் எதிர்ப்பை உருவாக்கின. இதனால் தமது பலத்தை நாடாளுமன்றத்தில் நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார் பேரூ. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஃபிரான்சுவா பேரூ தோல்வியடைந்தார். இதனால் பேரூ தலைமையிலான பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது.
பிரான்ஸில் கடந்த 12 மாதங்களில் 3 பிரதமர்கள் பதவி இழந்துள்ளனர். ஓராண்டில் 4-வது பிரதமரை தேர்வு செய்யும் நிலைக்கு அதிபர் இமானுவல் மேக்ரான் தள்ளப்பட்டுள்ளார்.
