தேனாண்டாள் முரளி மீது மோசடி வழக்குப்பதிவு!

Published On:

| By Balaji

மலேசியாவில் இயங்கி வரும் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் (Malik Streems Corporation) என்கிற நிறுவனம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத் தலைவருமான முரளி என்கிற ராமசாமி 15 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சென்னை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

தமிழ் திரைப்படங்களை முறைப்படி உரிமம் பெற்று வெளிநாடுகளில் வெளியிடும் தொழில் செய்து வருபவர் டத்தோ அப்துல் மாலிக். கபாலி படத்தை இந்த நிறுவனம் தான் வெளியிட்டது.

ADVERTISEMENT

இவரது நிறுவனத்தை அணுகி, ரஜினி காந்த்தின் ‘பேட்ட’ ராகவா லாரன்ஸின் ‘காஞ்சனா-3’ மற்றும் தனுஷின் ‘நான் ருத்ரன்’ ஆகிய மூன்று படங்களுக்கான பதிப்புரிமை தன்னிடம் இருப்பதாக கூறி, அவற்றை அவர்களுக்கு தருவதாக கூறி அவர்களிடம் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் முரளி ராமசாமி, 30 கோடி ரூபாய் பணம்பெற்றதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் அவரிடம் பேட்ட படத்தின் பதிப்புரிமை இல்லை என்று தெரியவந்து, மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் அதுகுறித்து கேட்டபோது, 15 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்துள்ளார் முரளி ராமசாமி.

ADVERTISEMENT

அதன்பின்னர் ‘காஞ்சனா-3’ மற்றும் ‘நான் ருத்ரன்’ ஆகிய படங்களின் பதிப்புரிமையும் அவரிடம் இல்லை என்கிற தகவல் அறிந்து அது பற்றி முரளி ராமசாமியிடம் கேட்டபோது, “மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் வாங்கிய பணத்தை திருப்பி தர மறுத்ததுடன்,ஒருகட்டத்தில் தமிழ்நாட்டில் என்னை மீறி உங்களால் எதுவும் செய்ய முடியாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி என்கிற ராமசாமி மீது மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன், சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது தற்போது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தயாரிப்பாளர்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறபோது அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காண வேண்டிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் மீது மோசடி குற்றசாட்டு வந்திருப்பது தயாரிப்பாளர்களை அதிர்ச்சியுற வைத்திருக்கிறது.

**- இராமானுஜம்**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share