குமரியில் தேவாலய திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். four people electrocuted at kumari
கன்னியாகுமரி மாவட்டம் இனயம் புத்தன்துறை பகுதியில் உள்ள அந்தோணியார் தேவாலயத்தில் கடந்த 18ஆம் தேதி திருவிழா தொடங்கியது. கடந்த 10 நாள்களுக்கு மேலாக திருவிழா நடைபெற்று வரும் நிலையில், நேற்று (மார்ச் 1) இரவு தேர்ப்பவனி விழா நடைபெற இருந்தது.
இதற்காக தேரை அலங்கரிக்க, நேற்று மாலையில் ராட்சத இரும்பு ஏணியை, விஜயன் (வயது 52), சோபன் (வயது 45), மனு (வயது 42) மற்றும் ஜெஸ்டிஸ் (வயது 35) ஆகிய 4 பேர் கோவிலுக்கு வெளியே நகர்த்தி கொண்டு சென்றனர்.
அப்போது, அப்பகுதியில் உள்ள உயர் மின்னழுத்த கம்பியில் ஏணி உரசிய நிலையில், அதிகளவில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 4 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.
திருவிழாவின் கடைசி நாளில் நடந்த இந்த சம்பவம் புத்தன்துறை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியான செய்திக்குறிப்பில், “புத்தன்துறை மீனவ கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நான்கு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.