ADVERTISEMENT

ஜப்பானில் நிலநடுக்கம்: நால்வர் பலி!

Published On:

| By admin

ஜப்பானில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நான்கு பேர் பலியாகியுள்ளனர், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து வடகிழக்கே 297 கிமீ தொலைவில் புகுஷிமா நகரின் கடற்கரை பகுதி அருகே நேற்று இரவு 11.36 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் புகுஷிமா நகரமே குலுங்கியது. வீடுகள் பயங்கரமாக குலுங்கியதால் தூக்கத்திலிருந்த பொதுமக்கள் பயந்துக் கொண்டு எழுந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக சுமார் இரண்டு மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தற்போதுவரை மின்சார சேவை கிடைக்காததால், மக்கள் அவதியடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

நிலநடுக்கத்தால் புகுஷிமா கடற்கரைப் பகுதிகளில் அலைகள் உயரமாக எழுந்து காணப்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தற்போது அலைகள் சீற்றம் குறைந்ததையடுத்து, சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

ஷிரோஷி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த அதிவேக புல்லட் ரயில், நிலநடுக்கத்தால் தடம் புரண்டது. பல்வேறு பகுதிகளில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், நான்கு பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஜப்பான் அரசு செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு மாட்சுனோ கூறுகையில், “ நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பீடு செய்து வருகிறோம். தற்போது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அடுத்த இரண்டு நாட்களுக்கு அதன் தாக்கம் இருக்கும். அதனால், பழுதடைந்த மற்றும் இடிந்த நிலையிலுள்ள கட்டடம் அருகே செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் நிலநடுக்கம் என்பது தொடர்ந்து நடைபெறும் நிகழ்வாக இருந்தாலும், கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தை மறக்க முடியாது. இதில் கிட்டதட்ட 18,500 மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

**-வினிதா**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share