அடையாறு ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையை, எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனம் வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையின் மிகப்பெரிய மருத்துவமனைகளில் அடையாறு காந்தி நகரில் இயங்கி வரும் ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையும் ஒன்று. இது ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இந்த நிலையில் ரூபாய் 128 கோடிக்கு எம்ஜிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கு, இந்த மருத்துவமனையை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாக, ஃபோர்டிஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மருத்துவமனை விற்பனை தொடர்பான அனைத்தும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் முடிவுக்கு வந்து விடும் என்றும், முழுவதும் பண பரிவர்த்தனையின் அடிப்படையிலேயே இந்த கையகப்படுத்துதல் இருக்கும் எனவும் இதுகுறித்து ஃபோர்டிஸ் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரசாந்த் ராஜகோபாலன், ” இந்த கையகப்படுத்துதல் மூலம் சென்னையில் எம்.ஜி.எம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் படுக்கை வசதி சுமார் 800 ஆக உயர்ந்துள்ளது. மலர் மருத்துவமனையை அதன் அசல் தன்மை மாறாமல் எங்களுக்கு ஏற்றவகையில் மாற்றி அமைப்போம்” என தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் ஹெல்த்கேர் நிறுவனமாக எம்.ஜி.எம் மாறியுள்ளது.
இதேபோல ஃபோர்டிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஷுடோஷ் ரகுவன்ஷி, ”எங்களது பிற முக்கிய சந்தைகளில், வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என இந்த விற்பனை குறித்து தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக வடபழனியில் இருந்த ஃபோர்டிஸ் மருத்துவமனையை காவேரி மருத்துவமனை நிறுவனம் கடந்த ஜூலை (2023) மாதம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
