முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவ சிலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 20) சட்டமன்றத்தில் அறிவித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது, “உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் மிகப் பெரிய ஜமீன்தாருக்கு மகனாக பிறந்தவர் விஸ்வநாத் பிரதாப் சிங்.
ஆடம்பர வாழ்கையில் கவனம் செலுத்தாமல் கல்லூரி படிக்கும் போதே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டார்.
சர்வோதய சமாஜில் இணைந்தார். பூமி தான இயக்கத்தில் பங்கேற்று தனது நிலங்களையே தானமாக வழங்கினார்.
1969 ஆம் ஆண்டு உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் வென்றார். உத்திர பிரதேச மாநில முதலமைச்சர், ஒன்றிய வர்த்தக அமைச்சர், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதியமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார்.
தேசிய முன்னணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகவே ஆனார்.
வி.பி.சிங் பிரதமராக இருந்தது 11 மாதங்கள் என்றாலும் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை. சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய மக்களுக்காகப் போராடியவர்.
தமிழ்நாட்டை தன்னுடைய ரத்த சொந்தங்கள் வாழும் மாநிலமாக வி.பி.சிங் நினைத்தார்” என்று புகழாரம் சூட்டினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், ”வி.பி.சிங்-ன் நினைவை போற்றும் வகையிலும், தமிழ் சமுதாயத்தின் நன்றியை தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் அவரது முழு உருவ கம்பீர சிலை அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் அவர்களது வரவேற்பைத் தெரிவித்தனர்.
மோனிஷா