முதல் மரியாதை : முன்னாள் எம்.எல்.ஏ வீடு சூறை!

Published On:

| By Kavi

மதுரை அருகே கோயிலில் மரியாதை அளிப்பதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ காரை திமுகவினர் எரித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சத்திரபட்டி அருகே கருவனூர் கிராமத்தில் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டு சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தார்.

பொன்னம்பலத்தின் சொந்த ஊரான கருவனூரில் உள்ள பாறை கருப்பசாமி கோயிலின் உற்சவ விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்றுடன் முடிவடைந்தது.

இதில், கோயிலில் மரியாதை அளிப்பதில் கருவனூர் திமுக கிளை செயலாளர் வேல்முருகன் தரப்பினருக்கும், முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலம் தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வேல்முருகன் தரப்பினர் திடீரென முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்பலத்தின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி பழனியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தபோது திடீரென வீட்டின் மீது கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர்.

அதோடு வீட்டின் ஜன்னல்களையும், டிவி, ப்ரிட்ஜ். பைக் கார் ஆகியவற்றையும் உடைத்தனர்.

தொடர்ச்சியாகப் பொன்னம்பலத்தின் காரை பெட்ரோல் ஊற்றி எரித்ததோடு, அருகிலிருந்த வீடுகளையும் கற்களால் எறிந்து உடைத்துத் தாக்குதல் நடத்தினர்.

இதில் பொன்னம்பலத்தின் உறவினர்களான பழனிக்குமார், வேல்விழி, சுப்பையா, விஜய் ஆகிய 4 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் மற்றொரு தரப்பான திருப்பதி என்பவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் தாக்குதல் நடத்திய திமுக கிளை செயலாளர் வேல்முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் தலைமறைவாகினர்.

கோயில் விழாவில் மரியாதை அளிப்பதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இதுகுறித்து சத்திரகுடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது அந்த கிராமத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எடப்பாடி கண்டனம்

அதிமுக நிர்வாகி வீடு, கார் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

“அமைச்சர் மூர்த்தி கருப்பசாமி கோயிலுக்கு வந்து சென்றபின்பு இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பதும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதும் மிகுந்த கண்டணத்துக்குரியது.

MLA Ponnambalam house ransacked

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத வகையிலும், சாமானியர்கள் அஞ்சும் வகையிலும் அராஜகத்தின் மொத்த உருவமாய் செயல்படும் இந்த ஆட்சியில் வன்முறை களமாக தமிழ்நாடு மாறி இருப்பது வேதனைக்குரியது மட்டுமல்ல வெட்கக்கேடானது‌.

இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனியும் தொடர்ந்து நடக்குமேயானால் அதற்கான விளைவுகளை இந்த அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதுடன் பொன்னம்பலம் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும்” வலியுறுத்தியுள்ளார்.

இராமலிங்கம்

திருச்சியில் சோகம்: பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலி!

“கமல் எங்களுக்கு கிடைத்த பாக்கியம்” : ‘புராஜெக்ட் கே இயக்குநர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share