உயிரிழந்த நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் வீட்டு தோட்டத்தில் நான்காவது முறையாக தடயவியல் நிபுணர்கள் இன்று (மே 9) ஆய்வு செய்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த அவரை காணவில்லை என அவரது மகன் கடந்த 4ஆம் தேதி புகார் அளித்த நிலையில், அன்றே ஜெயகுமாரின் உடல், அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.
ஜெயக்குமார் தனசிங்கின் மர்ம மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் திசையன்விளை சுற்றுவட்டார பகுதி முழுவதும் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இறந்த நிலையில் கிடந்த அவரது உடலின் உறுப்புகள் உடற்கூராய்வு செய்யப்பட்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அவரை கொன்றுவிட்டு, எரித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், உடற்கூறாய்வு அறிக்கை சென்னையில் உள்ள உயர் மருத்துவக் குழுவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயக்குமாரின் உடல் கிடந்த அவரது தோட்டத்தில் நேற்று சுமார் 5 மணி நேரமாக தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் பல முக்கிய தடயங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து தடயவியல் நிபுணர் ஆனந்தி தலைமையில் இன்று மீண்டும் தடயங்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
