முத்தமிழ் முருகன் மாநாடு என்பது முருக பக்தர்களுக்கு செவிக்கு விருந்தளிக்கும் விஷயம். அதே போல, மாநாட்டில் பங்கேற்கும் முருக பக்தர்களின் வயிற்றுக்கும் விருந்தளிக்க பல்வேறு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பழனியில் தமிழக இந்து சமயஅறநிலயத்துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டில் பங்கேற்கும் 2 லட்சம் பேருக்கு மூன்று வேளையும் அறுசுவை உணவு வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு உணவு சமைக்கும் பணியில் 700 பேர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, பழனியில் 2 லட்சம் பேருக்கு உணவு அளிக்கும் வகையில் பிரம்மாண்டமான உணவு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு உணவுகளை சமைப்பதற்கு என்றே பிரத்யேகமாக சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர் . காலையில் தோசை , பொங்கல், வடை, இட்லி, லட்டு, வாழைப்பழம் என 14 வகையான பதார்த்தங்கள் வழங்கப்படுகிறது.
மதியம் தயிர்சாதம், தக்காளி சாதம் என்று வழங்காமல் தலை வாழை இலை போட்டு பெரிய விருந்துக்கான உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதியம் ராஃப்டி மால்பூவா, ஆம்பூர் கறிபாலா தம்பிரியாணி, சாதம், குழம்பு , பொறியல் என 15 வகை உணவு பதார்த்தங்கள் இடம் பெறுகின்றன.
மிகவும் சிறப்பாக உணவு இருக்க வேண்டும் என்றும், யாருக்கும் எந்த குறையும் இருக்கக்கூடாது என்பதில் அரசு அதிகாரிகள் கவனத்துடன் உள்ளனர். இதனால், மிகவும் தரமான உணவு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது.
மாநாடு இரு நாட்கள்தான் நடைபெறுகிறது என்றாலும் அதற்கு முன்னதாக 3 நாட்களாகவே உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக 20 ஆயிரம் பேருக்கு மேல் உணவு அருந்தியுள்ளனர். உணவு எல்லாருக்கும் ஒரே மாதிரி மிகவும் தரமாக விநியோகிக்கப்படுகிறது. கூட்டத்தை ஒழுங்குப்படுத்த தனித்தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு உணவுக்காக மிகுந்த சிரத்தை எடுத்து ஏற்பாடு செய்துள்ளது தெரிகிறது. `பனங்கருப்பட்டி பருத்திப்பால் அல்வா `அடைபிரதமன் பாயாசம் கூட வழங்கப்படுகிறது. இதில் இருந்தே அரசு எந்த குழப்பமும் இல்லாமல் சிறப்பாக மாநாடு நடைபெற வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டியிருப்பது தெரிகிறது. மாநாட்டுக்கான ஏற்பாடுகளை அமைச்சர் பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி உள்ளிட்டோர் பார்த்து பார்த்து செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
லாட்டரி டு ராக்கெட் … மார்ட்டின் குழுமம் பறக்க தொடங்கிய பின்னணி என்ன?