மாநிலம் முழுவதும் இன்று (ஜனவரி 9) நடைபெற்ற ஸ்டிரைக்கை தொடர்ந்து, சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகம் உட்பட அனைத்து பணிமனைகளிலும் நாளை ’முற்றுகை போராட்டம்’ நடைபெறும் என சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
காலிப் பணியிடங்கள் நியமனம், பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அண்ணா, சிஐடியு உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கின.
ஆனால் முதல்நாளான இன்று சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் திமுக ஆதரவு தொழிற்சங்கங்கள் மற்றும் பயிற்சி ஓட்டுநர்கள் கொண்டு பரவலாக பேருந்துகள் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.
அவர், “கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் நாளை அனைத்து பணிமனைகளிலும், பேருந்து நிலையங்களிலும் அரசு சட்டவிரோதமாக இயக்கி கொண்டிருக்கிற பேருந்துகளை தடுக்கும் விதமாக மறியல் போராட்டம் நடைபெறும்.
சென்னையை பொறுத்தவரை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகமான பல்லவன் இல்லம் முன்பு நாளை காலை 10 மணிக்கு மேல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கும் தமிழ்நாடு அரசு சார்பில் சரியான பதில் வராவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை நாங்கள் அறிவிப்போம்” என்று சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா