தமிழகத்தில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் டிசம்பர் ஜனவரி மாதங்களில் குளிர் அதிகரிக்கும்.
இது பனிப்பொழிவு காலம் என்பதால், அடுத்த சில நாட்கள் சென்னையில் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் குளிர் அலை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது.
இந்த சூழலில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்னர் 10) வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரு தினங்களுக்கு தமிழக உள்பகுதியில் அதிகாலை வேலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
மழையைப் பொறுத்தவரை வரும் 16ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளது.
சென்னை வானிலையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று கூறியுள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னர் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கும் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் இடை இடையே 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
