நாடு முழுவதும் நாளை (ஆகஸ்ட் 26) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை கோயம்பேடு மார்க்கெட் முதல் கன்னியாகுமரி தோவாளை மார்க்கெட் வரை அனைத்து மார்க்கெட்களிலும் இன்று கூட்டம் அலை மோதுகிறது.
நள்ளிரவு 2.30 மணி முதலே அங்குள்ள பூ மார்க்கெட் உள்பட அனைத்து மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதுடன் வியாபாரமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதன்படி விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு அனைத்து பூக்களின் விலையும் 3 மடங்கு உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 1,300க்கும், ஐஸ் மல்லி 1000க்கும் ஜாதிமல்லி, முல்லை 750ல் இருந்து 900க்கும், பிச்சி 400ல் இருந்து 1000க்கும், கனகாம்பரம் 500ல் இருந்து 2 ஆயிரத்துக்கும், சாமந்தி 200ல் இருந்து 350க்கும், சம்பங்கி 200 ல் இருந்து 500க்கும், அரளி 200ல் இருந்து 350க்கும், பன்னீர் ரோஸ் 160ல் இருந்து 180க்கும், சாக்லேட் ரோஸ் 160ல் இருந்து 280 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர 10 நாட்கள் கொண்டாடப்படும் ஓணம் விழாவையொட்டி கேரளாவிற்கும் பெரிய அளவில் பூ வியாபாரமாகி வருகிறது.
வாழை இலையானது 5 மடங்கு விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.700க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கட்டு வாழை தற்போது ரூ.3000க்கு விற்கப்படுகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்களான அருகம்புல் ஒரு கட்டு ரூ. 60 வரையிலும், எருக்கம்பூ மாலை ரூ. 50 வரையிலும், அலங்கார குடை ரூ. 10 முதல் 120 வரையிலும், பொரிக்கடலை, மா இலை தோரணம், தாமரைப்பூ உள்ளிட்டவைகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டாலும், விழாக்கால விற்பனையால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
