Flood warning Tamirabarani villages
தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் கரையோர மக்கள் ஒருவர் விடாது அனைவரும் வெளியேற வேண்டும் என்று தூத்துக்குடி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால் தொடர்ந்து அந்த அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி நேற்று (டிசம்பர் 17) அறிவிப்பு வெளியிட்டு எச்சரிக்கை விடுத்தார்.
அதில், “திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் தற்போது வந்து கொண்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லும் பணியினை வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, மகளிர் திட்டம், பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை மற்றும் அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
எனவே, தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான பகுதிகளுக்கு /அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்திருந்தார்.
வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வட்டாட்சியருக்கும் தொடர்பு கொண்டு அந்த அந்த பகுதி மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுமாறு கூறி வருகிறார்.
வட்டாட்சியர் ஒருவரிடம் கலெக்டர் மிகவும் சீரியஸான குரலில் நேற்று இரவு பேசிய ஆடியோ பரவி வருகிறது.
ஆட்சியர்: வணக்கம், தாமிரபரணி ரிவர் ஓரமா எத்தனை கிராமங்கள் வருது?
“15 கிராமங்கள்”
ஆட்சியர்: எவ்வளவு தூரத்தில் இருக்கும்?
“2 , 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும்”
ஆட்சியர்: எல்லோரும் வெளியே வந்துடணும். ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் எதாவது சொன்னாரா?
“இல்லை சார்”
ஆட்சியர் : வேறு வழியே இல்லைங்க… இதுவரை 50 ஆயிரம் கன அடி நீர் ரிலீஸ் பன்னிருப்பாங்களா… இப்போ ஒரு லட்சம் கன அடிக்கும் அதிகமா வரப்போகுது. புரிஞ்சிக்கோங்க… நிலைமை மோசமா இருக்கு…
மக்கள் தூங்கிட்டிருக்கும் நேரத்துல ஊருக்குள் தண்ணீ வந்துருச்சுனா ஒன்னுமெ செய்ய முடியாது..
வரேன், வரலனு யார் சொன்னாலும் கேட்காதீங்க. வலுகட்டாயமா வெளியேத்துங்க.
மகளிர் திட்டம், வார்டு மெம்பர், தலைவர், செண்ட்ரல் குரூப்ஸ்கிட்டயும் சொல்ல சொல்லியிருக்கேன்.
நீங்க என்ன பண்ணுவீங்கனு தெரியாது. தூங்கிட்டிருந்தாலும் எழுப்பி கூட்டிட்டு வந்துருங்க.
ஆர்டிஓவிடம் வண்டி சொல்லியிருக்கிறேன். வண்டியெல்லாம் கூட்டுட்டு போய், அந்த கிராமங்கள்ல ஃபுல்லா வீட்டை பூட்டிட்டு வர சொல்லுங்க.
அப்புறமா, எந்த ரிலீஃப் செண்டருக்கு கூட்டிக்கொண்டு போறது, என்ன சாப்பாடு போடுறதுங்கிறதெல்லாம் பின்னாடி பாத்துக்குவோம். உயிரை காப்பத்துறதுதான் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டி.
நிலைமை மோசமா இருக்கு. இதுக்கு மேல இது எவ்வளவு முக்கியம்னு சொல்லமுடியல, பாத்துக்கோங்க. உடனடியா வேலை செய்யுங்க.
பஞ்சாயத்து தலைவர், வார்டு மெம்பர் என எல்லோரிடமும் பேசிடுங்க. 2, 3 கிலோ மீட்டர் இல்ல அதை தாண்டி கூட தண்ணீ வரும்.
ஒரு லட்சம் கன அடி நீர் வரப்போகுது. 4 மணி நேரம்தான் அதிகபட்ச நேரமா இருக்கு. 100 சதவிதம் ஊருக்குள்ள தண்ணீ வந்துரும், இதுல எந்த சந்தேகமும் இல்ல.
மழையினால இல்ல, டேம்ல இருந்து தண்ணீர் திறப்பதுனாலனு சொல்லிருங்க” என அறிவுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும்: பாலச்சந்திரன்
இந்த வாரம் அது தேவையில்லை…பிக்பாஸ் கொண்டு வந்த திடீர் மாற்றம்!
Flood warning Tamirabarani villages
