கொசஸ்தலை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

Published On:

| By Monisha

flood warning for kosasthalai

கொசஸ்தலை ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது.

மழை காரணமாக சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று (செப்டம்பர் 25) மாலை 4 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட உள்ளது.

இதனால் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 3458 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (25.09.2023) நீர் இருப்பு 33.90 அடியாகவும் கொள்ளளவு 2792 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டியில் நீர் வரத்து காலை 6.00 மணி நிலவரப்படி 1520 கன அடியாக உள்ளது.

தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து 34 அடியைத் தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 25.09.2023 பிற்பகல் 04,00 மணி அளவில் விநாடிக்கு 1000 கன அடி உபரி நீர் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்திற்கு வரக்கூடிய நீர்வரத்து தொடர்ந்து அதிகப்படியாகும் நிலையில் கூடுதல் உபரி நீர் படிப்படியாக திறக்கப்படும் என முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது.

எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர்,

தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்துர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம்,

எண்ணூர் மற்றும் கொசஸ்தலையாற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மோனிஷா

சிறிய பட்ஜெட் படங்களை தயாரிக்க கூடாதா? – விஷாலுக்கு போஸ் வெங்கட் பதிலடி!

குவியும் பதக்கங்கள்.. ஆசிய விளையாட்டு போட்டிகளில் அசத்தும் ‘இந்தியா’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share